பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவலம் 13 என்று நினைக்கிறவனுக்குத்தானே, வறுமை இடுக்கண் செய்ய முடியும்? வறுமையை வேண்டுமென்றே பெற்று வாழும் துறவிகட்கும் மனத்திண்மை உடையார்க்கும் இது துன்பமாகப்படுவதில்லை. அதனைத் துன்பமாக நினைக்கிறவனுக்கும் அது மனத்தளவே நின்று விடுகிறது. இங்கும் ஒரு முரண்பாடு வேலை செய்கிறது. பொருளுடைமையால் இன்பம் அனுபவிக்கவேண்டும் என்று நினைக்கிற நினைவிற்கும் இன்மையென்ற உண்மை நிலைக்கும் உள்ள மாறுபாடே துன்பத்திற்குக் காரணமாகிறது. இம்முரண்பாட்டால் துன்பம் விளையினும் அது மிகவும் சாதாரணமானது. அத்துன்பம் நம் மனத்தில் அச்சத்தோடு கலந்த வியப்பை உண்டாக்குவதில்லை. ஆனால், அவலத்தில் ஏற்படும் முரண்பாடு எளிதானதன்று. உயிருக்குள் ஏற்படும் முரண்பாடே அவலத்திற்குக் காரணமாகிறது. அஃதாவது மனிதனின் எண்ணத்திற்கும் செயலுக்கும் இடையே தோன்றும் போராட்டமேயாகும். உயிரினும் சிறந்ததாகக் கருதப்படும் இரண்டு பொருள்களின் நடுவே ஏற்படும் முரண்பாட்டையே உயிருக்குள் ஏற்படும் முரண் என்று கூறுகிறோம். கடமைக்கும் அன்பிற்கும் இடையே நடைபெறுகிற போராட்டத் தையும் இதற்கோர் உதாரணமாகக் கூறலாம். கணவன் மனைவி, அரசன் குடிமகன், தந்தை தநயன் என்பவர் போன்ற தொடர்புடையவர்களின் இடையே நிற்பது அன்பு, கடமை ஆகிய சிறந்த தளைகள். இத் தளைகளால் பிணிக்கப் பெற்றுள்ள இருவர் முரண்பட்டு, இத்தளைகளை அறுத்துவிட முயல்வாராயின் ஆண்டு அவலம் நிகழ்கின்றது. தனி மனிதனுள்ளும் இது நிகழ்வதுண்டு. அவனுள் இருக்கும் இரண்டு சிறந்த பண்புகளுள் முரண் தோன்றி ஒன்றை