பக்கம்:இருட்டு ராஜா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112இருட்டு ராஜா

 குலுக்கி மினுக்கதிலே குறைச்சல் ஒண்ணும் இல்லே. வேலை வெட்டி செய்றதிலே அந்த அக்கறை இருக்கணுமில்லே?” என்று அவள் நாள்தோறும் “ஆயிரத்தெட்டு அர்ச்சனை” பண்ணுவதும், மருமகள் தலையில் குட்டுவதும், கன்னத்தில் இடிப்பதும், முதுகில் அறைவதும் அதிகரித்து வந்தது.

மாப்பிள்ளை குமரகுரு அம்மா செய்கிற ஆக்கினைகளையும் அதட்டல்களையும் பார்த்தும் கேட்டும் திருதிரு. என்று விழித்துக் கொண்டிருந்தானே தவிர, மனைவிக்கு பரிந்து பேசுவதற்கு வாய் இல்லாதவனாக இருந்தான். அம்மா முறுக்கேற்ற முறுக்கேற்ற, அவள் சொல்படி ஆடுகிறவனாகவும் ஆனான்.

“அம்மா சொல்வதும் சரிதானே? உனக்கு சோறு சமைக்கத் தெரியலே. வெறும் ரசம் வைக்கக் கூடத் தெரியலே. சாம்பார்னு நீ பண்றது சப்புனு இருக்கு. சிலநாள் குழம்பிலே உப்பு அதிகமாப் போயிருது; சில நாளைக்கு உப்பு காணாமப் போகுது. பசியோடு உட்காரும் போது, சாப்பாடு வாயிலே வைக்க விளங்காம இருந்தால் மனுசனுக்கு எப்படி இருக்கும்?” என்ற ரீதியில் தொண தொணக்கலானான்.

பிறகு, அம்மாவும் மகனும் சேர்ந்து கொண்டு “பிறந்த வீட்டிலேயிருந்து அரிசி கேளு. பணம் வாங்கிட்டு வா. எவர்சில்வர் பாத்திரங்கள் வாங்கிவா என்று தொல்லை கொடுத்தனர். வளர்மதி பிறந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள். அவள் தேய்பிறையாய் கரைந்து போயிருந்ததைக் கண்டு அனுதாபப்படாத ஊரார் உறவினர் எவரும் இல்லை.

ஒரு மாதம் வீட்டில் இருந்து உடம்பைத் தேற்றிக் கொண்டு புருஷன் வீட்டுக்குப் போன பெண்ணை மாமியார்க்காரி சுடுசொல் கூறித்தான் வரவேற்றாள். ‘அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/114&oldid=1139790" இலிருந்து மீள்விக்கப்பட்டது