பக்கம்:இருட்டு ராஜா.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்151


கீழே விழுந்ததில் ஏதாவது ஒரு கல் தாக்கி, ‘பொருத்தில் அடிபட்டு அவன் செத்துப் போயிருக்க வேண்டும்’ என்று ஊகித்தார்கள்.

எவனாவது பின்னாலிருந்து கல்லை வீசி எறிந்து தாக்கியிருப்பானோ? அப்படி அடிபட்டு இவன் கீழே விழுந்து மேலும் காயப்பட்டு செத்திருப்பானோ?

சிலர் சந்தேகக் குரல் எழுப்பினார்கள்.

யார் அவ்வாறு தாக்கப் போகிறார்கள்? எவன் துணிச்சலாகக் கல்லெறிந்து முத்துமாலையைக் கொன்னிருக்க முடியும்? முத்துமாலைக்கு அப்படிப்பட்ட விரோதி யார் உண்டு?

அநேகர் எதிர்ப்புக் குரல் கொடுத்தார்கள்.

முத்துமாலையின் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் இல்லையா? மாடசாமி மாதிரி. நாரம்புநாதன் மாதிரி. ஏன் நாரம்புநாதனே பணம் கொடுத்து ஆளை ஏவி இவனைத் தாக்கியிருக்கக் கூடாது? அப்படி நடக்காதா என்ன?

மனிதர்கள் பலவிதம், பலரும் பலப் பல விதமாகப் பேசினார்கள். மனம் போன போக்கில் கற்பனையை ஒடவிட்டார்கள்.

“அதெல்லாம் ஒண்ணும் இராது. அவன் குடிச்சுப் போட்டு, தட்டுத் தடுமாறிக்கிட்டு, இந்தப் பக்கமா வெளிக்கு வந்திருப்பான். ரொம்ப ஒரமாப் போயிருப்பான். கால் சறுக்கிக் கீழே விழுந்திருக்கான். பெரிய கல்லுலே மண்டை இடிச்சிருக்கு. பொருத்திலே பலமான அடிபட்டிருக்கு. உயிரு போயிட்டுது. இதுதான் நடந்திருக்கும். வீணான சந்தேகங்களைக் கிளப்பிக்கிட்டு நின்னா, போலீசுக்கு ரிப்போர்ட்டு அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும். அவங்க வந்தா பிரேத பரிசோதனை நடத்தனும், பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பனும், உடம்பை அறுத்துப் பார்க்கணும்பாங்க. அநாவசியமான அக்கப்போருதான் எல்லாம். இதெல்லாம் என்னத்துக்கு? இவ்வாறு உறுதியாகப் பேசினார் கிராம முனிசீப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/153&oldid=1140281" இலிருந்து மீள்விக்கப்பட்டது