பக்கம்:இருட்டு ராஜா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152இருட்டு ராஜா

 “நீங்க சொல்றது சரிதாமுங்கேன். அதுதான் நடந்ததிருக்கு. இருட்டு நேரமில்லா. தன்னறிவோடு நடக்கிறவனுக்கே தடுமாறும். குடிபோதையிலே தள்ளாடிக் கிட்டே போறவனுக்கு சொல்லுவானேன்!”

பெரியவர்கள் ஆமோதித்துப் பேசினார்கள். “ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க சட்டுப்புட்டுனு சோலி முடியட்டும்” என்று அவசரப்படுத்தினார்கள்.

கட்டை வண்டி ஒன்று கொண்டு வரப்பட்டது. முத்துமாலையின் உடலை அதில் எடுத்து வைத்து வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.

தனபாக்கியம் தலைவிரி கோலமாய் அழுது அரற்றியவாறு வண்டி கூடவே வந்தாள். வீட்டில் தரையில் முட்டி முட்டி அழுதாள். அவளோடு சேர்ந்து அழுவதற்குப் பெண்கள் கூடினார்கள்.

ஆண்கள் கூடி ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தையும் ஒழுங்காகச் செய்து முடித்தார்கள்.

“ஊம்ம். முத்துமாலை கதை முடிஞ்சுது!என்ன போக்குப் போனான் கரிக்கொல்லன்! இப்படி ஒரேயடியாகப் போயிருவான்னு யாரு நெனச்சா?” என்று சொல்லலானாள் தங்கராசுவின் தாய்.

அவள் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில், ஊர் சமாச்சாரங்கள் பலவற்றோடும், முத்துமாலை செத்துக் கிடந்த விவரத்தையும் சேர்த்து எழுதினாள்.

அந்த செய்தி தங்கராசுக்கு மிகுந்த வருத்தம் அளித்தது.

“முத்துமாலை அவனுடைய வழியில் நல்லதையே செய்துகொண்டிருந்தான். அவனுடைய முரட்டு சுபாவங்களினாலும் போக்குகளினாலும் முத்துமாலையின் நல்லதனங்கள் பிரகாசிக்காமலே இருண்டு விட்டன. அதே மாதிரி, அவன் எப்படிச் செத்தான் என்பதும் வெளிப்படையாகத் தெரியாமல் போய்விட்டது. இருட்டிலே வாழ்ந்து, இருட்டிலே செயல் புரிந்த முத்துமாலை இருட்டில் செத்துப்போனதும் பொருத்தம் தான்” என்று அவன் எண்ணிக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/154&oldid=1140282" இலிருந்து மீள்விக்கப்பட்டது