பக்கம்:இருட்டு ராஜா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்27

 “முத்துமாலை அம்மன் கோயிலுக்கு வரிப்பணம் கொடுக்கலே. கொடைக்குக் கொடை தலைக்கட்டு வரி கொடுக்கனுமா இல்லியா? ஊர் நியாயம் தானே அது? நான் கொடுக்க மாட்டேன்; அம்மன் எனக்கு ஒரு உதவியும் பண்ணலே; நான்மட்டும் அம்மனுக்கு பணம் கொடுக்கனுமாக்கும்னு அவன் சண்டித்தனம் பண்ணினான். உன்னைவிட ஏழை எளியவங்க எல்லாம் கொடுக்கலியா, ஊர் வரியை மறுக்கப்படாதுன்னு எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கலே. அதுனாலே, அவனோட அம்மா செத்ததும், ஊர்காரங்க மறிசல் பண்ணிட்டாங்க. அம்மன் வரி பாக்கிப் பணம் பூரா வந்தால்தான் பிணம் வீட்டைவிட்டுப் போகலாம்; இல்லேன்னா தெருவைக் கடக்க முடியாதுன்னு சொல்லி, கூடி நின்னாங்க. முத்துமாலை பிடிவாதம் புடிச்சான்; அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டான். அதுதான் ஊர் மரபுன்னு சொல்லிப் போட்டாங்க. ஒரு நாள் பூரா பிணம் வீட்டிலேயே கிடந்தது. அப்புறம் அவன் தம்பிடி பாக்கி இல்லாமல் அம்மன் வரியையும் அபராதம் பத்து ரூபாயையும் ஊரார் முன்னாலே கட்டினான் பிறகு மளமளன்னு காரியம் நடந்து முடிஞ்சுது. இம்புட்டு வேணுமோ? ஊரோடு ஒத்துப் போயிருக்கலாம் இல்லையா?”

அம்மா நீட்டி இழுத்துப் பேசி முடித்தாள்.

“முத்துமாலைக்கு கல்யாணம் ஆகலியோ?”

“அறுதக் கொல்லனுக்கு கல்யாண எழவு ஒரு கேடா? அவனை முறிச்சு அடுப்பிலே வய்க்கோ!” என்று படபடத்தாள் தாய். பிறகு தொடர்ந்தாள்: “இப்படிப் பேர் எடுத்த கொம்பேறி மூக்கனுக்கு எவ பொண்ணு கொடுப்பா? அம்மாக்காரிக்கு ஆசைதான். எவளாவது கொடுத்திருவான்னு, அலையா அலைஞ்சா. யார் யாரிட மெல்லாமோ சொல்லி முயற்சி பண்ணினா. கல்யா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/29&oldid=1138971" இலிருந்து மீள்விக்கப்பட்டது