பக்கம்:இருட்டு ராஜா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்71

 பணம் கொடுத்திருக்கிறவங்க. நீரு உம்ம கடமையைச் செய்யலே. அதனாலே நாங்க உரிமையோடு கேட்கிறோம்...”

“அப்படியா ஸேரி!” நாதசுரக்காரனின் தங்கப் பல் பளிச்சிட்டது.

முத்துமாலைக்குக் கோபம் வந்தது. இந்த எடக்கு மயிரெல்லாம் இந்த ஊரிலே வச்சுக்கிடாதே தம்பி, உன் தங்கப் பல்லு. உதிர்ந்து போயிரும். உன் வாசிப்பிலே உனக்குக் கெர்வம் இருக்கிறது சரி. அதுக்காக ஒரேயடியா மண்டைகனமேறிப் போகாதே. அப்படிப் போனா உன் டாப் எகிறிப் போகும் எகிறி. ஒகோன்னானாம்!” என்று கூவினான்.

தொடர்ந்து சொன்னான்: “அம்பாள் வீதி வலம் புறப்பட்டாச்சு. நீயும் கூடவே வாசிச்சிக்கிட்டு வரணும். இந்த ஊர்க்காரங்க ரசிப்பை நீ ஒண்ணும் எடைபோட வேண்டியதில்லை. வாசிக்காமல் எத்தினே, நீ உன்குழல், மெடல், தங்கப்பல்லோடு உன் ஊருக்குத் திரும்பிக்கிட மாட்டே, ஊரைப்பத்திக் கேவலமாப் பேச உனக்கென்ன தைரியம்? நிதானமா நடந்துக்கோ தம்பி” என்றான்.

அவனைச் சேர்ந்தவர்களும் அவன் போக்கினால் வசீகரிக்கப்பட்டவர்களும் பலமாகக் கைதட்டினார்கள்.

நாதசுரக்காரன் நிலைமையைப் புரிந்து கொண்டான். எல்லோருக்கும் பொதுவாக வணக்கம் தெரிவித்து விட்டு, குழல் வாசிப்பில் ஈடுபட்டான். நல்ல முறையிலேயே வாசித்தான்.

சப்பரம் ஒரு தெருவில் பிரவேசித்ததும், முத்துமாலை அங்கிருந்து நகர்ந்தான். கோயில் பக்கமாக நடந்தான். சன்னிதிக்குப் போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/73&oldid=1139334" இலிருந்து மீள்விக்கப்பட்டது