பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

பங்களாப் பெரிய மனிதர் நல்லவர்; தாராள மனம் படைத்த வள்ளல், அள்ளிக் கொடுக்கும் லட்சாதிபதி என்றெல்லாம் கருத்துக்கள் நிலைத்து விட்டபோது, அவரைப் பற்றி அவதுாறு பேசும் துணிச்சல் அங்குள்ளவர்களுக்கு ஏற்படவில்லைதான். மர்மமாக ரத்தமிழந்து மாயமாகச் செத்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருந்தது. ரெ. புரத்து வாசிகள் பலியாகவில்லை யென்றாலும், அவ்வூரைச் சுற்றியுள்ள ஊர்களில் திடீரென்று எவளாவது காணாமல் போவதும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் உடல் கள்ளிப் புதரிலோ, பாழ்ங் கிணற்றிலோ, ஏதாவதொரு தோட்டத்திலோ கிடந்து அகப்படுவதும் சகஜமாகி விட்டது. இப் படிச் செத்தவர்களின் தொகை ஏழு ஆகிவிட்டது. சாகாமல் படுக்கையில் கிடந்த குமாரி பவானியையும் சேர்த்தால், இன்னது என்று அறியமுடியாதிருந்த அசுர சக்திக்குப் பலியான பெண் ஜீவன்கள் எட்டு என்றே கணக்கெழுத வேண்டும். ஆகவே சுற்று வட்டாம் நெடுகிலும் பீதியும் பயமும் கோகர்த்தனம் புரிந்தன. பேய்க் கதைகள் சூறையாய் சுழன்றன. மர்மக் கொலைகாரர்கள் பற்றிய அளப்புகள் வளர்த்தன. மொத்தத்தில், அமைதியிழந்து அவதியுற்றார்கள் அந்தப் பிராந்திய மக்கள். போலீஸார் தீவிரமாகச் சோதனைகளில் ஈடுபட்டார்கள். யார் யாரையோ சந்தேகித்தார்கள். ‘எங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை ; இருந்தாலும் பார்த்து வைக்கலாமே !’ என்று சொல்லி, மந்திரவாதி செல்லம் பண்டிதரைக் கூப்பிட்டு ‘மை போட்டு’ப் பார்த்தார்கள். பலன்தான் ஏற்படவில்லை. கடைசியாக அவர்களது நம்பிக்கையின் ஒரே பற்றுக் கோடாகக் குமாரி பவானிதான் விளங்கினாள். எப்படியும் அவளைக் குணப்படுத்தி, அவள் மூலம் ஏதாவது அறிய முடியுமா என்று ஆசைப்பட்டார்கள் அவர்கள்.