பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

குது. அதைத் தரும் புண்ணியவானைப் பற்றி நாங்க ஏன் வீணாக விசாரிக்கனும்?' இந்த பதிலில் உழைத்தவர்களின் திருப்தி தொனித்தது; ஆனால் ஊராரின் ஆவலைக் கிளறி விடும் தன்மையுமிருந்தது.

தேவையான வேலைகள் எல்லாம் முடிவடைந்து சூழ்நிலை அமைதியும் அழகும் பெற்ற தினத்திலிருந்து அந்த பங்களாவில் ஜீவகளை பிறந்தது. அங்கு யாரோ குடிவந்து விட்டார்கள் என்று தெரிந்ததே தவிர, 'யார் வந்தது, எத்தனைபேர் வந்திருக்கிறார்கள்; ஆண்களா பெண்களா; அவர் களுக்கு என்ன வேலை; எந்த ஊர்'. என்பன போன்ற விவரம் எதையும் யாருமே புரிந்து கொள்ள இயலவில்லை. முன் வாசலின் பெரிய கேட் சதா சாத்தியே கிடந்தது. உள்ளுலகத்திலிருந்து வெளியே வந்து புறவுலகுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் யாரும் அங்கிருப்பதாகக் தெரியவில்லை. முன்பு பாசி படிந்த பழைய சமாதி போல் தோன்றிய கட்டிடம் இப்போது கண்ணே உறுத்தும் புதிய சமாதி மாதிரி விளங்கியது. அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்நிலை பலரகமான பேச்சுகள் பிறந்து பரவத் துணை புரிந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கொருமுறை இரவு பத்து மணிக்கு மேலே கார் வெளியே போகும் சத்தம் கேட்கிறது என்கிறார்கள் சிலர். நடுச் சாமத்திலே கார் வந்து பங்களாக் காம்பவுண்டிற்குள் போவதாகத் தெரிகிறது என்றார்கள் ஒன்றிருவர். விவசாயப் புதுமைப் பரிசோதனைகளில் ஈடு பட்டிருந்தாரே ஒருவர், அந்தப் பழைய கறுப்பர் தான் இப்போது வெள்ளையடித்துப் புதிய கிரகப்பிரவேசம் நடத்தி யிருக்கிறார் என்றார்கள். எவனோ கள்ள நாணயம் அடிக்கிற எத்தன் வந்திருக்கிறான்; கொள்ளைக்கார ஜமீந்தார் குடி வந்திருக்கிறான்; கொலைகாரப் பாவியாகத் தானிருக்கும்; அரசியலில் ஈடுபட்டு 'அண்டர் கிரவுண்டு'ஆகிவிடும் வேஷக்காரன் எவனோ இங்கு வந்து புது நாடகம் நடத்துகிறான்; கொடு நோய் பற்றிய பணக்காரன் தனி வாழ்வு வாழ