பக்கம்:இரு விலங்கு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சால நன்று

47


களவும் கற்பும்

 ள்ளி நாயகியை முருகன் யாரும் அறியாமல் எடுத்துச் சென்றான். தமிழில் இரண்டு வகை மணம் உண்டு. களவு, கற்பு என்று அவற்றைச் சொல்வார்கள்; இவற்றைக் கைகோள் என்று கூறுவர். கைகோள் - ஒழுக்கம். 
 பல பிறவிகள் தோறும் தொடர்ந்து வந்த தொடர்பு காரணமாக ஆடவனும் மகளிரும் தனியே ஒருவரை ஒருவர் காண்பார்கள்.
 நல்ல ஊழின் தூண்டுதலால் இந்தச் சந்திப்பு நிகழும். அவர்கள் பல பிறவிகளில் காதலர்களாக இருந் தமையின் கண்டபொழுதே அவர்களிடையே காதல் தோன்றும். பின்பு அவர்கள் அடுப்பாரும் கொடுப்பாரும் இல்லாமல் அந்தக் காதலை வளர்த்துக்கொண்டு வருவார் கள். அதன் பிறகே காதலன் முயற்சி செய்து யாவரும் அறியக் காதலியைத் திருமணம் செய்துகொள்வான். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அவர்கள் ஒழுகும் ஒழுக்கத்தைக் களவொழுக்கம் என்று சொல்வர். அந்தக் களவுக் காதல் தமிழ் நூல்களில் சிறப்பாகப் பேசப் பெறும். மதுரையில் எழுந்தருளி யிருக்கும் ஆலவாய்ப் பெருமான் களவியல் என்று அறுபது சூத்திரங்களால் ஒர் இலக்கண நூலை அளித்திருக்கிறான். களவுக் காதலைப் பற்றிய இலக்கணம் அதில் இருக்கிறது. கல்யாணம் ஆன பிறகு வாழும் வாழ்வு கற்பொழுக்கம் ஆகும். களவின் வழியே வந்த கற்பு என்றும், களவின்வழி வாராக் கற்பு என்றும் இரண்டு வகை உண்டு. அவற்றில் களவின் வழி வந்த கற்பே சிறந்தது. அதாவது, யாரு ம் அறியாமல் தனியே காதலர்கள் ஒன்றுபட்டு அப்பால் திருமணம் செய்துகொள்வதே சிறப்புடைய தென்பது தமிழ் மரபு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/69&oldid=1402474" இலிருந்து மீள்விக்கப்பட்டது