பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறுமாப்புள்ள இளவரசி

9


குடிகாரன் ஒருவன் குழப்பம் செய்ததால், அந்தப் பாண்டங்கள் உடைந்து சிதறிப் போய்விட்டன. ஆகவே, மேற்கொண்டு அவளுக்கு வேறொரு வேலை தேட வேண்டுமென்று பிச்சைக்காரன் யோசித்தான். "சரிதான், என்னுடன் வா! அரண்மனையிலே ஒரு சமையற்காளியை எனக்குத் தெரியும். அவள் மூலம் உனக்கும் ஒரு வேலை வாங்கித் தருகிறேன்!” என்று சொல்லி, அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

இளவரசி தன் செருக்கை மீண்டும் அடக்கிக்கொள்ள நேர்ந்தது. அரண்மனைச் சமையலறையில் அவளுக்கு இடைவிடாது வேலை இருந்துகொண்டேயிருந்தது. அங்கு வரும் வேலைக்காரர்கள், வண்டிக்காரர்கள் முதலில் அவளிடம் முறை தவறிப் பேசினார்கள். ஆனால், தலைமைச் சமையற்காரி அவர்களை அதட்டி விரட்டினாள். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும் இரவில் இளவரசி தன் கணவனுடைய குடிசைக்குத் திரும்பிவிடுவாள். அங்கு செல்லும் பொழுது அவனுக்காகச் சில பண்டங்களைத் தன் சட்டைப்பைகளில் அவள் போட்டுக்கொண்டு செல்வது வழக்கம்.

ஒரு வாரம் கழிந்தது. திடீரென்று அரசனுக்குத் திருமணம் ஏற்பாடாகியிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், மணப்பெண் யாரென்பது மட்டும் ஒருவருக்கும் தெரியவில்லை. சமையலறையில் வேலை அதிகமாயிற்று. எண்ணற்ற பண்டங்கள் பணியாரங்களெல்லாம் தயாரிக்கப் பெற்றன. இரவில் வேலைகள் முடிந்த பிறகு சமையற்காரி இளவரசியின் சட்டைப் பைகளில் மிஞ்சியிருந்த பண்டங்களைப் பொட்டலங்களாகக் கட்டித் திணித்து வைத்தாள். பிறகு, "அரண்மனை மண்டபத்திலே அலங்காரங்கள் செய்திருக்கிறார்கள். நாம் அங்கே போய் எட்டிப் பார்த்துவிட்டுப் போவோமே!” என்று அவள் அழைத்தாள். இருவரும் மண்டபத்தின் அருகிலே சென்று பார்த்தனர்.

மண்டபத்திலிருந்து வேகமாக ஒர் ஆண்மகன் வெளியேறி அவர்கள் அண்டையில் வந்து நின்றான். அவனே அரசன் ! கம்பீரமான தோற்றம், வீரத்திற்கு அறிகுறியான மீசை, சிறிதளவு தாடி, உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன், அவன் கண்டோரைக் கவரும்வண்ணம்