பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. சீமாட்டி காதலீன்


ல்லாண்டுகளுக்கு முன்னே, அயர்லாந்து தேசத்தில், எங்கிருந்தோ இரண்டு வணிகர்கள் வந்து குடியேறினார்கள். அவர்களைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. அவர்கள் அந்நாட்டு மொழியாகிய 'கெயிலிக்' மொழியை நன்றாகப் பேசினார்கள். அபூர்வமான விலையுயர்ந்த உடைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள்.

அவர்கள் பெருஞ்செல்வர்கள். இருவரும் ஒரே வயதுடையவர்களாகத் தோன்றினார்கள்; இருவருக்கும் சுமார் ஐம்பது வயதிருக்கும். நெற்றியிலே படர்ந்த இரேகைகளையும் சுருக்கங்களையும் நரைத்த தாடியையும் பார்த்தாலே அவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என்பது தெரிந்துவிடும்.

அவர்கள் தங்கியிருந்த சத்திரத்திலே அவர்களைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர்க ளுடைய நோக்கம் என்ன, தொழில் என்ன, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் அவ்வளவு ஒதுங்கி அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். அங்கே அவர்கள் தங்கியிருந்த காலத்தில், நாள் தோறும் தங்களுடைய பண மூட்டைகளை அவிழ்த்துத் தங்க நாணயங்களை எண்ணி எண்ணி மீண்டும் கட்டி வைப்பதே அவர்களுடைய வேலை. வெளியிலே இருந்து கொண்டு சாளரங்களின் வழியாகப் பார்த்தாலே உள்ளேயிருந்த பொற்காசுகளின் மஞ்சள் நிறமான ஒளி வீசுவதைக் கண்டுகொள்ளலாம்.

சத்திரத்து நிர்வாகியான சீமாட்டி அவர்களிடம் ஒரு நாள் பேசிப் பார்த்தாள் : "இவ்வளவு பணக்காரர்களாயிருக்கும் நீங்கள் ஏழை மக்களின் துன்பத்தை நீக்க ஒர் உதவியும் செய்வதில்லையே! தான தர்மங்கள் எதுவும் செய்வது உங்களுக்கு வழக்கமில்லையோ?” என்று அவள் கேட்டாள்.