பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

இறுமாப்புள்ள இளவரசி


நான் மேரியையே மணந்துகொள்கிறேன் ! என்று அவன் சொல்லிக்கொண்டான்.

குள்ளக் கிழவன் மீண்டும் அவனண்டையில் வந்து, "நான் தூக்கச் சொன்னவுடன் நீ பிணத்தைத் தூக்கவில்லை. ஆனால், இப்பொழுது நீதான் அதைச் சுமந்து நிற்கிறாய். இனி அதைக் கொண்டுபோய்ப் புதைக்க வேண்டும்: அதையும் நீயாகச் செய்ய மாட்டாயல்லவா? அதையும் நீ செய்யும்படி நாங்களே செய்ய வேண்டுமோ” என்று கேட்டான்.

"மேன்மை தங்கியவரே, உங்களுக்காக என்னாலியன்றவற்றையெல்லாம் செய்கிறேன்!” என்றான், காத்தான். அவனுக்குப் புத்தி தெளிந்துவிட்டது. பயத்தினால் மரியாதையுள்ள சொற்கள் தாமாகவே அவன் வாயிலிருந்து வெளிவந்துவிட்டன.

மீண்டும் கிழவன் எள்ளி நகைத்தான். "இப்பொழுது அமைதியாக அடங்கிவிட்டாய். போகப்போக இன்னும் அமைதியடைந்துவிடுவாய் ! காத்தான் இனி நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அதன்படி செய்ய வேண்டும்! இல்லாவிட்டால், பின்னால் நீ மிகவும் வருந்த வேண்டியிருக்கும். நீ இந்தப் பிணத்தைத் தூக்கிக்கொண்டு முதலில் டிம்போல்டேமஸ் என்ற இடத்திலுள்ள இடுகாட்டிற்குப் போய், அங்கே தக்க இடம் பார்த்து இதைப் புதைக்க வேண்டும். குழி தோண்டி எடுத்த மண்ணில் மிஞ்சியதைக் கவனமாக வெளியே தூரத்தில் கொண்டு போய் நீயே கொட்டவேண்டும் !" என்று அவன் உத்தரவிட்டான். அத்துடன், அவன் முதலிலே சொன்ன இடுகாட்டில் இடம் கிடைக்கவில்லையானால், வரிசையாக வேறு நான்கு ஊர்களின் பெயரைச் சொல்லி, அந்த இடங்களுள் ஒன்றில் புதைக்க வேண்டுமென்றும் தெரிவித்தான்.

அவனுடைய பேச்சு முடிந்தவுடன் எல்லாக் குள்ளர்களும் பலமாகச் சிரித்துக் கை கொட்டி ஆரவாரம் செய்தார்கள், ஹோ! ஹோ! ஹூயீ! ஹூயீ! " என்று ஊளையிட்டார்கள். பிறகு, அவர்கள் அனைவரும் சேர்ந்து, "விடிவதற்கு இன்னும் எட்டு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் நீ இந்த மனித உடலைப் புதைத்துவிட வேண்டும். தவறினால் நீ பிழைக்கமாட்டாய் !" என்று எச்சரிக்கை