பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. இறுமாப்புள்ள இளவரசி

ல்லவராகிய ஒர் அரசருக்கு, ஒரு காலத்தில், வடிவழகியாகிய ஒரு பெண் இருந்தாள். அவளுடைய எழிலைப்பற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கேள்விப்படாதவரே இல்லையெனலாம். ஆனால், அவள் எந்த மன்னனையும் இளவரசனையும் மணந்துகொள்ள மறுத்து வந்தாள். கடைசியாக, அரசர், ஒரு நாள், தமக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருந்த அரசர்கள், இளவரசர்கள், பிரபுக்கள், சீமான்கள் பலரையும் தமது சபைக்கு வரும்படி ஏற்பாடு செய்து, இளவரசி அவர்கள் அனைவரையும் பார்த்துத் தனக்குகந்தவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விரும்பினார். விருந்தினர் அனைவரும் காலை உணவுண்ட பின்னர், அரண்மனையை ஒட்டியிருந்த புற்றரையில் வரிசை வரிசையாக நின்றனர். இளவரசி அவர்களுக்கு முன்னால் நடந்து சென்றாள். ஒவ்வொருவரையும் அவள் பார்த்துப் பார்த்துக் கழித்துக்கொண்டே வந்தாள். ஒருவர் தடித்திருந்தார் : "இவர் பீப்பாய், வேண்டா" என்றாள், இளவரசி. மற்றொருவர் மெல்லிய உடலுடன் நெட்டையாயிருந்தார்: "இவர் நெட்டைக் கொக்கு, தேவையில்லை" என்றாள். வெள்ளை முகத்துடன் இருந்த ஒருவரைக் கவனித்து, "செத்தவன் முகம் போல் வெளிறியிருக்கிறது இவர் முகம்!என்றாள். சிவந்த கன்னங்களுடன் விளங்கிய ஒருவரை, "இவர் சேவற்கொண்டை" என்று அவள் ஏளனம் செய்தாள். இவ்வாறு பலரையும் பழித்து ஒதுக்கிக் கொண்டே சென்றாள். இறுதியில் அவள் ஒர் இளைஞனைக் கண்டு சற்றே நின்றாள். அவன் நல்ல உடலமைப்பும் அழகும் பெற்றிருந்தான். அவனிடம் என்ன குறை காணலாமென்று இளவரசி யோசித்துக்கொண்டிருந்தாள். அவன் நேர்த்தியான மீசையும் சிறு தாடியும் வைத்திருந்ததைக் கண்டு அவள், "தாடிக்காரர் எனக்கு வேண்டா" என்றாள். ஆகவே, வந்திருந்தவர் அனைவரும் திரும்பிச் சென்றுவிட்டனர். அரசருக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. அவர்