பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26 இறையனார் அகப்பொருள் (களவு

என்னை ,
' அறநிலை யொப்பே பொருள்கோள் தெய்வம்
யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே
இராக்கதம் பேய்நிலை யென்றிக் கூறிய
மறையோர் மன்ற லெட்டவை அவற்றுள்
துறையமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பிதன்'
பொருண்மை யென்மனார் புலமை யோரே.'
என்பதன் பொருளென்று உணர்வது.

பிரமம் என்பது -
நாற்பத் தெட்டியாண்டு பிரமசரியங் காத்தாற்குப்
பன்னீராட்டைப் பிராயத்தாளை அணிகலன் அணிந்து கொடுப்பது.
கொடாவிடின், ஓர் இருதுக்காட்சி ஒருவனைச் சாராது கழிந்தவிடத்து
ஒரு பார்ப்பனக் கொலையோடு ஒக்கும் என்பது;
இதனை அறநிலை என்றுணர்வது.

பிரசாபத்தியம் என்பது -
மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது;
இதனை ஒப்பு என்று உணர்வது.

ஆரிடம் என்பது -
ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து
அவற்றிடை நீரிற் கொடுப்பது;
இதனைப் பொருள்கோள் என உணர்வது.

தெய்வம் என்பது -
வேள்வி ஆசிரியற்கு வேள்வித் தீமுன் வைத்துக் கொடுப்பது;
இதனைத் தெய்வம் என்று வழிபடப் பட்டது.

காந்தர்வம் என்பது -
இருவர் ஒத்தார் தாமே கூடுங் கூட்டம்;
இதனை யாழோர் கூட்டம் என்று உணர்வது.

அசுரம் என்பது -
கொல்லேறு கொண்டான் இவளை எய்தும், வில்லேற்றினான் இவளை எய்தும், திரிபன்றி எய்தான் இவளை எய்தும், மாலை சூட்டப்பட்டான் இவளை எய்தும் என இவ்வாறு சொல்லிக் கொடுப்பது,
இஃது அரும்பொருள் வினை நிலை என்பது.

இராக்கதம் என்பது -
அவள் தன்னினுந் தமரினும் பெறாது வலிந்து கொள்வது.

பைசாசம் என்பது -
மூத்தாள் மாட்டும் துயின்றாள் மாட்டும் களித்தாள் மாட்டும் சார்வது;
இது பேய்நிலை எனப்படும்.


(பாடம்) 1. புலமையோர் புணர்ப்பிதன். 2. அதனை ஒப்பென்பது.