பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இறையனார் அகப்பொருள் (களவு

சூத்திரம் - 11



தன்னுட் குறிப்பினை அருகுந் தோழிக்கு
முன்னுறு புணர்ச்சியின் அருகலும் உண்டே

என்பது என்னுதலிற்றோ எனின்,
அங்கனங் குறைநயப்புக் கூறப்பட்ட தலைமகள் இன்ன தன்மையளென்பது உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள் :
தன் உள் குறிப்பினை என்பது - தோழி தன் உள்ளத்துக் குறிப்பினை என்றவாறு ;
அருகுந் தோழிக்கு என்பது- சார்த்துந் தோழிக்கு என்றவாறு ;
முன்னுறு புணர்ச்சியின் என்பது - இயற்கைப் புணர்ச்சி,
அங்கு, நின்னிற் பிரியேன் பிரியினாற்றேன்' என்றது உண்டன்றே, அதனான் என்றவாறு;
அருகலும் உண்டு என்பது - தலைமகள் தனது தன்மையைச் சார்த்தலும் உடையள் என்றவாறு.

என்பது என் சொல்லியவாறோ எனின்,
அறிய நிற்றலும் உடையள்,
அறியாமை நிற்றலும் உடையள் என்றவாறு.

மெலிதாகச் சொல்லிக் குறைநயப்புக் கூறின இடத்து,
எம் பெருமான் தனக்குத் தகாத இளிவரவொழுகா நின்றானெனக் கவற்சி உண்டன்றே,
அது புலப்படாமை நிற்கும்.
வலிதாகச் சொல்லிக் குறைநயப்புக் கூறினவழி,
நெருநல் வாரானாயினான் என்றமையின் இறந்துபட்டான் என ஆற்றாமை பெரிதாம்,
அங்குப் புலப்பட நிற்கும் என்பது.

இனி, ஒருதிறத்தார் வேண்டுவது :
சொல் நிகழ்தலுமுண்டு, சொல் நிகழாமையுமுண்டு என்பது ;
அஃதாமாறு மெலிதாகச் சொல்லிக் குறைநயப்புக் கூறியவழி,
முன் இறந்துப்பட்டான் கொல்லோ எனக் கருதி ஆற்றாமையொடு நின்றாள், உள்ளானாயது கேட்டு ஆற்றாமை நீங்கும்;
நீங்க, நாணு வந்தடையும்;
அடையத், தோழி முன்னர் நிற்கலாள்,
'வேங்கைப்பூக் கொய்தும், மயிலாடு மாறு காண்டும், அருவியாடுகம்' என ஒன்றன் மேலிட்டு நீங்கும்;
அதற்குச் செய்யுள் :

'கணிதிற வேங்கையும் கொய்தும் கலாவம் பரப்பிநின்று
மணிநிற மாமயில் ஆடலும் காண்டும்வல் லத்துவென்ற
துணிகிற வேல்மன்னன் தென்னர் பிரான்சுடர் தோய்பொதியில்
அணிநிற மால்வரைத் தூநீர் அருவியும் ஆடுதுமே.' (98)