பக்கம்:இறைவர் திருமகன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

அந்தக் கிழவனையும் சற்றுமுன் எங்கிருந்தோ வந்து தன் குழந்தையை வணங்கிச் சென்ற யூதரினத்தைச் சேராத அந்தப் பெரிய மனிதர்களையும் நினைத்துப் பார்க்கப் பார்க்க அவளுக்கு அது ஒரு தெய்வக் குழந்தை என்றே தோன்றியது. பெருமையினால் அவள் மனம் பூரித்தது. யாரும் பெறாத பேறு பெற்றதை எண்ணி அவள் மனம் களித்தது.

அந்த மூன்று பெரிய மனிதர்களும் திரும்பி வருவார்கள் என்று எதிர் பார்த்துக் காத்திருந்து ஏமாந்து போனான் ஹெராடு மன்னன். இறைவன் அவர்களை வேறு பாதையாகத் தங்கள் தாயகம் செல்லும்படி கனவில் எச்சரித்து அனுப்பிவிட்டான்.

அவர்கள் குழந்தை இருக்குமிடத்தை வந்து சொன்னால், தன் ஆட்களை அனுப்பி அதைக் கொன்று விடலாம் என்று நினைத்திருந்த அவன் எண்ணம் மண்ணாயிற்று. அதனால் பெருஞ்சினம் கொண்ட அவன், தன் படை வீரர்களை அழைத்து ஒரு கொடிய கட்டளையிட்டான்.