பக்கம்:இறைவர் திருமகன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

பெற வந்திருக்கிறோம்" என்று அவர்கள் கூட்டத்தினரிடம் முறையிட்டு வழி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இயேசுநாதரின் சீடர்கள் இதைக் கவனித்தார்கள். விரைந்து அந்தத் தாய்மார்களிடம் வந்தார்கள். கூட்டத்தை விலக்கி அவர்களுக்கு உதவி செய்ய அவர்கள் வரவில்லை. “நீங்கள் இப்போது அவருக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள். அவர் இப்போது இன்றியமையாத வேலையில் ஈடுபட்டிருக்கிறார். நீங்கள் அவரைக் காண முடியாது. குழந்தைகளை அழைத்துக் கொண்டு திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறி அவர்களைக் கண்டித்தார்கள். ஆனால் அந்தத் தாய்மார்கள் திரும்பிச் செல்லவில்லை. மீண்டும் கூட்டத்தை நெருக்கித் தள்ளிக் கொண்டு உட்புகவே முயன்றார்கள்.

சீடர்கள் திரும்பவும் வந்து அவர்களைத் திருப்பியனுப்ப முற்பட்டார்கள். இருசாராருக்கும் இடையே பேச்சு மிகுந்தது. இந்தக் கூச்சல் இயேசுநாதரின் காதில் விழுந்தது. அவர் என்ன நடக்கிறதென்று கவனித்தார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவர்கள் பேசிக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து வந்தார்.