பக்கம்:இறைவர் திருமகன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

கொண்டிருந்தார்கள். பொய்ச் சான்றுகள் பல கூறி அவர் நாத்திகம் பேசினார் என்று பழித்தார்கள்.

அந்தத் தீயவர்கள் இயேசு நாதரின் முகத்தில் உமிழ்ந்தார்கள்; தலையில் குட்டினார்கள்; கன்னத்தில் அறைந்தார்கள். அத்தனையும் பொறுத்துக் கொண்டு அமைதியின் வடிவமாக அவர் இருந்தார். நடப்பதையெல்லாம் எட்டிப் பார்த்துக் கொண்டு வெளிவாசல் அருகில் நின்றான் பீட்டர்.

வெளியில் குளிருக்காக நெருப்பு மூட்டி, அதிகாரிகளும் வேலையாட்களும் அதைச் சுற்றியிருந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். பீட்டரும் அங்கே சென்று அவர்களோடு கூட அமர்ந்து குளிர் காய்ந்தான். நெருப்புக்கு நேரே தன் கைகளை நீட்டிச் சூடு படுத்திக் கொண்டான். அப்பொழுது பெரிய குருவின் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்த ஒரு வேலைக்காரி பீட்டரைக் கவனித்தாள், நெருப்பு வெளிச்சத்தில் அவள் அவனை அடையாளம் கண்டு கொண்டாள்.