xv
3. இலக்கண நூல்களின் அறிமுகம்
இந்த நூலின் ஆசிரியர், ஒவ்வோர் இலக்கண நூலையும் அறிமுகப்படுத்தும் முறை சிறப்பு வாய்ந்ததாகும்.
முந்து நூல்களில் நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே (பக். 14) என்றும்; அது பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல் என்றும் பக், 34) அது பிற்கால இலக்கணப் பகுப்புகளுக்கும் இடம் தருவதாக அமைந்தது (பக். 54) என்றும் தொல்காப்பியத்தைப் போற்றுகின்றார்.
இவ்வாறே இவர் பின்வருமாறு இலக்கண நூல்களை அறிமுகப்படுத்துகின்றார்:
இறையனார் அகப்பொருள்
“தொல்காப்பியத்திற்குப் பின்னர் முழுதிலக்கணம் தழுவாத பகுதியிலக்கண நூல்கள் தோன்றத் தொடங்கின. அவ்வகையில் அகப்பொருள் பற்றிக் கூறும் நூலாகத் தோன்றியது இந்நூல்” (பக். 171).
புறப்பொருள் வெண்பா மாலை
“இந்நூல், புறப்பொருள் இலக்கண உலகில் தனிச் சிறப்புடையதாகும். ஏனெனில் இதற்குப்பின், புறப்பொருள் கூறும் தனி இலக்கண நூல்கள் எவையும் தோற்றமுற்றில; ஐந்திலக்கணம் கூற வெழுந்த நூல்களும் இத்தகைய விதியையும் சிறப்பையும் கொண்டில” (பக். 206),
யாப்பருங்கலம்
“யாப்பாகிய அரிய அணிகலம் என்றும், யாப்பாகிய கடலைக் கடக்க அமைந்த அரிய கலம் (கப்பல்) என்றும் பொருள் கொள்ள அமைந்த அரிய நூல்” (பக். 216).
வீரசோழியம்
“ஐந்திலக்கணம் என்னும் அமைப்பில் வெளிவந்த முதல் நூல் இவ் வீரசோழியமே” (பக். 240).