118
118
மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் என்று தொல்காப்பியம் பத்துப்பாட்டு ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதி நிறைவிலும் வருகின்றது. இக்குறிப்பை விளக்குவதுபோல்,
“வண்டிமிர் சோலை மதுரா புரிதனில்
எண்டிசை விளங்க வந்த ஆசான்
பயின்ற கேள்விப் பாரத்து வாசன்
நான்மறை துணிந்த நற்பொருள் ஆகிய
தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர்
தானே யாகிய தன்மை யாளன்
நவின்ற வாய்மை நச்சினார்க் கினியன்”
என இவரைப் பற்றிய பாயிரப் பகுதி கூறுகின்றது. இவற்றால் இவர் மதுரையார் என்பதும் ‘பாரத்துவாச கோத்திரத்தார்’ ஆகிய பிராமணர் என்பதும் புலப்படும். “பாரத்துவாச கோத்திரத்தினர் வைணவர், சுமார்த்தர், மாத்துவர் என முப்பிரிவினர் என்றும் அவருள் இவர் சுமார்த்தர் என்றும் அத்வைதக் கொள்கையர்” என்றும் கூறுவர். (உரையாசிரியர்கள், பக். 141; நச்சினார்க்கினியர் பக். 6,7)
சமயம்
இவர் வேத வழிப்பட்ட நெறியினர் எனினும் ‘சிவச்சுடர்’ எனப் பாயிரம் சொல்லுதலாலும் நூலில் வரும் சில குறிப்புகளாலும் சிவனெறிப் பற்றாளர் என்று கொள்ளலாம். எனினும் இவர்தம் சிந்தாமணி உரையைப் பயின்றாரும், அச் சிந்தாமணி யுரையை அச் சமய நோக்குக்கு முரணா வகையில் உரை வரைய வேண்டும் என்பதற்காகவே அச்சமயம் புகுந்து அழுந்தக் கற்று அதன் முன்னே தாம் எழுதிய உரையை விடுத்துப் புத்துரை செய்தார் என்று கூறப்படும் செய்தி அறிந்தாரும் நச்சினார்க்கினியர் சமயச் சால்பைப் போற்றாமல் இரார்.