128
யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமு மெய்ப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து எழுவும் சீப்பும் முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப் பட்டதாம்” எனச் செறிவு மிகக் கூறுகிறார்.
இனி இதே நூற்பாவில், “சிறப்புடை அரசியலாவன மடிந்த உள்ளத்தோனையும், மகப்பெறா தோனையும், மயிர் குலைந்தோனையும், அடிபிறக்கிட்டோனையும், பெண்பெயரோனையும், படை இழந்தோனையும், ஒத்த படை எடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல்லாது விடுதலும் கூறிப் பொருத்தலும் முதலாயினவுமாம்” என்பது சொல்ல வேண்டும் என்னும் ஆர்வத்துடிப்பால் இயைத்துக் கூறுகின்றார்.
தெளிபொருள்
‘குற்றியலிகரம்’ உயிரா? ஒற்றா? இதனை இந்நாளிலும் ஒற்று என்பார் உளர். “ஊர்ந்தெனவே குற்றிய லிகரமும் உயிரென்பது பெற்றாம். உயிர்க்கல்லது ஏறுதலின்மையின்” என்கிறார் (மொழி. 1).
இராக் காக்கை, இராஅக் கூத்து என வரின் இராவிடத்துக் காக்கை இராவிடத்துக் கூத்து எனப் பொருள் தரும் என்றும்,
இராஅக் காக்கை இராஅக் கூத்து எனவரின் இராத என்னும் எதிர்மறைப் பெயரெச்சப் பொருள் தரும் என்றும் விளக்குகிறார் (உயிர். 25). இவ்வாறு மயக்கம் அறுக்கும் இடங்கள் பலவாம்.
“இல்லொடு கிளப்பின் இயற்கையாகும்” என்பதற்குக் ‘கோவில்’ என்று எடுத்துக்காட்டுக் கூறுகிறார் (உயிர். 91). அது ‘கோயில்’ என்றே இருந்திருக்கும். ‘படியெடுத்தோர் பிழையோ’ என எண்ண வேண்டியுளது. இளம்பூரணர்