8. புறப்பொருள் வெண்பாமாலை
பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகிய புறப்பொருளைப் பற்றி வெண்பா யாப்பில் ஓர் ஒழுங்குறத் தொடுக்கப்பட்ட நூல், புறப்பொருள் வெண்பாமாலை எனப்பட்டது. ‘வெண்பாமாலை’ என்பதும் இது.
இதனை இயற்றியவர் சேரவேந்தராகிய ஐயனாரிதனார் என்பார்.
“ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐயனா ரிதனார்”
என்று வரும் சிறப்புப்பாயிரப் பகுதியாலும்,
“மெய்யி னார்தமிழ் வெண்பா மாலையுள்
ஐயனா ரிதனார் அமர்ந்துரைத் தனவே”
என்று வரும் ஒழிபியல் நூற்பாப் பகுதியாலும் (18) இதனை அறியலாம்.
ஐயனாரிதனார்
ஐயாரிதனார் என்னும் பெயர் திருவிடைக் கழியைச் சார்ந்த குரோஞ்சேரியிலுள்ள சாத்தாவின் (சாஸ்தா) பெயர் என்பர். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் பாசண்டச் சாத்தன், சாத்தனார் முதலிய பெயர்கள் எண்ணத் தக்கன. ‘ஐயனார்க்கு இனியன்’ என்பதே ஐயனாரிதன் என்பதன் பொருளாகும். ‘நச்சினார்க்கினியன்’ என்னும்