9. தமிழ் நெறி விளக்கம்
விளக்குப் போன்ற நூல் விளக்கம் எனப்படுதல் வழக்கு. ‘பெரும் பொருள் விளக்கம்’ என்பது, தமிழ் நெறி விளக்கம் போன்றதொரு பழ நூல். அது மறைந்த நூல்களுள் ஒன்றாகிவிட்டது. அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் என்பவை விளக்கப் பெயரால் இன்றும் விளங்கி வரும் நூல்கள்.
பதிப்பு
தமிழர் ஒழுகலாறு ஆகிய தமிழ் நெறியை விளக்குவதாம் இந்நூலை இயற்றியவரின் பெயரைத் தானும் அறிந்து கொள்ள முடியவில்லை. இதன் முற்பகுதி பிற்பகுதி ஆகிய இருபாலும் சிதைந்த நிலையில் கிடைத்த ஓர் ஏட்டைக் கொண்டு ‘தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழ்’ எனப் புலவர்களால் புகழப்படும் அகப்பொருட் பகுதியையேனும் அழிந்து படாமல் காக்க வேண்டுமென்னும் ஆர்வத்தால் பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதரால் 1937-இல் பதிக்கப்பட்டது.
நூல்
பொருளியல் என்னும் ஒரே ஒரு பகுதியில் 25 நூற்பாக்கள் அளவில் கிடைத்துள்ளன. அப்பொருளியலில் வரும் முதல் நூற்பா,
"அகத்ததும் புறத்ததும் ஆயிரு பகுதியின்
மிகுத்ததும் ஆகி விரிந்தது பொருளே "