415
இரா. இராகவ ஐயங்கார்க்கும் ஆசிரியராக இருந்தவர் என்பதும் அறியத்தக்கன.
இவர் மாலிய சமயத்தர் (வைணவர்) ஆகலின்,
“அமிழ்தினும் இனிய தமிழ்மறை அருளிய
வகுளா பரணன் வனசமென் மலரடி
சிந்தைவைத் தியம்புவல் செய்யுட் கணியே”
என வாழ்த்தும் வருபொருளும் கூறுகின்றார். வகுளாபரணர் என்பார் மகிழம்பூவை அணிந்த நம்மாழ்வார்.
நூல்
சந்திராலோகம் 126 நூற்பாக்களைக் கொண்டுள்ளது.
““அணிதான் பொருள் சொல் எனவிரண் டவற்றுள்
பொருளணி ஒன்றே சிறப்பெனப் புகல்வர்”
என்று பொருளணியைச் சிறப்பிப்பது போலவே, அதன் இலக்கணத்தையே கூறினார். சொல்லிலக்கணப் பகுதியைச் சொன்னாரல்லர்.
தாம் கூறப்போகும் அணிகள் நூறு என்பதை மூன்றாம் நூற்பாவில் கூறுவதுடன் அந்நூறு அணிகளின் பெயர்களையும் முறையே கூறுகிறார். அம்முறையே முறையாய் இலக்கணமும் கூறி முடிக்கிறார்.
அணியின் பெயர்களைப் பெரிதும் தமிழ் வடிவிலேயே தந்திருப்பது பாராட்டுக்குரியது. அவ்வாக்கம் இவர்தம் சொல்லாக்கத் திறத்தை நன்கு வெளிப்படுத்துகின்றது. அணிகளைத் தொகுத்துக் கூறிய இடத்தில் தமிழாக்கம் செய்த இவர், இலக்கணம் கூறும் இடத்தில் திரிபு என்பதைப் பரிணாமம் எனவும், ஒன்றற்கொன்று உதவி என்பதை அன்னியோன்னியம் எனவும் சில அணிகளை மாற்றிக் கூறுவது மயக்கத்தை உண்டாக்கும்.
விசாகப் பெருமாளையரின் அணியிலக்கண நூலில் உள்ள சேர்வை அணியும், கலவையணியும் சந்திரா