5
“திணைமயக் குறுதலும் கடிநிலை யிலவே
நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிய
புலன்நன் குணர்ந்த புலமை யோரே”
என்றும்,
“தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறிந்தது தோன்றிற்
புலனென மொழிப் புலனுணர்ந் தோரே”
என்றும் அவர் நூற்றலால் வலியுறும் (958, 1497). சிறப்புப் பாயிர உரையில், “புலம் என்பது இலக்கணங்களை” என நச்சினார்க்கினியர் வரைவதும் இப்பொருளைத் தெளிவிக்கும்.
எழுத்து, இயல்பு, முறை, மரபு :
இனி, எழுத்து என்பதும் இலக்கணத்தைக் குறித்தல் அறியப் பெறுகின்றது.
“எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் — மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்”
என்னும் வெண்பாவை, “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப” என்னும் குறட்பா விளக்கத்தில் (392) பரிமேலழகர் காட்டுதலால் அது விளங்கும்.
இயல்பு என்பது இலக்கணப் பொருள் தருதல், “இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே” என வரும் தொல்காப்பியத்தால் (950) தெளிவாம். முறை என்பதும் இலக்கணப் பொருளில் வழங்கப் பெற்றமை அறிய வருகின்றது.
“இறையும் கேள்வி யிலாதவென் புன்கவி
முறையில் நூலுணர்ந் தோரும் முனிவரோ”
என வரும் கம்பர் அவையடக்கப் பாடலும்,