பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 9



கொம்புகளையும், நீண்ட வாலையும் உடையது மாடு என்றான். அவ்வியல்பு யானைக்கும் பொருந்தும். ஆகவே, கூறிய இலக்கணம் நிரம்பாது என்று ஒருவன் சொல்ல, பிளவுண்ட குளம்புகளைக் கொண்ட நான்கு கால்களையும், இரண்டு கொம்புகளையும், நீண்ட வாலையும் உடையது மாடு என்றான். அதுவும் அமையாது என்று கண்டவிடத்துக் கூறிய இலக்கணங்களோடு, கன்று ஈன்று, அக்கன்று உண்டு எஞ்சிய பாலை, மக்கள் பயன்கொள்ள அளிப்பது மாடு என்றான். இவ்வாறு இறுதியில் கூறிய நிரம்பிய இலக்கணத்தைக் கூற, அவனுக்கு எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கும். மாடு ஒன்றை மட்டும் கண்ட காலத்திலிருந்து, அவன் வாழ்வில், குதிரையும், ஆடும், யானையும், பிறவும் குறுக்கிட்ட பல ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி வந்த பின்னரே, அவ்விலக்கணத்தை அவனால் காண முடிந்தது. இலக்கண நூல்கள் எழுந்த முறை இதுவே.

தமிழ் மொழியின் தலையாய இலக்கணமாம் தொல்காப்பியம், தமிழ் மொழியின் எழுத்துக்களுக்கும், சொற்களுக்கும் இலக்கணம் கூறுகிறது; தமிழ் மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கிறது. பார்ப்பு பறழ் போலும் சொற்கள் இளமை உணர்த்தும் பெயர்களாம் எனச் சொல்லளவிலேயே இளமைப் பொருள் உணர்த்தும் சொற்களைக் குறிக்கின்றது. ஏறு, ஏற்றை போலும் சொற்கள் ஆண்மை உணர்த்தும் பெயர்களாம் எனச் சொல்லளவிலேயே ஆண்மைப் பொருள்