பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 புலவர் கா. கோவிந்தன்



மக்களையும் அறிந்து அவர் வழி செல்லுமாறு, இங்குள்ள நிலையினை எடுத்துக் காட்டுவதைக் கடமையாகக் கொள்வர். தம் காலத்தே, தம் நாட்டைச் சூழ உள்ள நாடுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் காட்டுவதோடு, தமக்குப் பின் வாழும் தம் நாட்டு மக்களுக்கும் காட்டுதல் வேண்டும் எனக் கருதுவர். கருதிய அவ்வான்றோர் தாம் வாழும் தம் நாடு, அந்நாட்டு நல்லாட்சி, அந் நல்லாட்சிக்குரியோனாய அரசன், அவன் ஆட்சி மாண்பு, அந்நாட்டு மக்கள், அவர் மனவளம், அவர் தம் வாழ்க்கை வனப்பு ஆகிய அனைத்தையும் பாட்டில் இசைத்துப் பாராட்டிச் செல்வாராயினர். அவ்வாறு அவர் பாடிய அப் பாக்களே இலக்கியங்களாம். ஆதலின், இலக்கியம், அவ்விலக்கியத்தைப் பெற்ற மக்களோடு ஒன்றி நிற்கும் இயல்புடையதாயிற்று.

இலக்கியத்தைக் காணின், அவ்விலக்கியத்திற் குரிய மக்களைக் காணலாம்; மக்களைக் காணின், அம் மக்களிடையே அம் மக்களின் இலக்கியங்களைக் காணலாம். அதனால் மக்கள் வளர வளர, இலக்கியமும் வளரும்; அவர் வளம் குன்றக் குன்ற, அவர் இலக்கியமும் வளங் குன்றித் தோன்றும் என்பது உறுதி. மக்களுக்கும் இலக்கியங்களுக்கும் உள்ள இவ்வுறவினை உட்கொண்டு தமிழ் இலக்கியங்களின் இயல்பினை ஆராய்தல் வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியம் தோன்றியது. அது தோன்றுவதற்குக்