பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 17



காட்சிகள் ஒவ்வொருவர் இலக்கியத்திலும் இடம் பெறுவதும் இயல்பாம். அதைத் தடை செய்தல் இயலாது. வேண்டுமானால், அப் பொருள்களையும், அப் பொருள்களைக் குறிக்கும் பிற மொழிச் சொற்களையும், அம் மக்களின் கொள்கைகளையும் தம் மொழிக்கும் தம் பண்பாட்டிற்கும் ஏற்பத் திருத்தி மேற்கொள்வதையே செய்தல் இயலும்; அவற்றை அறவே விடுத்து வாழ்தல் இயலாது.

புதிய பொருள்களும், புதிய சொற்களும், புதிய பழக்க வழக்கங்களும் ஒருபால் இடம் பெற, தேவையற்றுப் போன பொருள்களும், அவற்றைக் குறிக்க வழங்கும் சொற்களும், பழக்க வழக்கங்களும் ஒருபால் வழக்கற்றுப் போதலும் நிகழும். உலகிய லுக்கும், உலகில் வழங்கும் இலக்கியங்கட்கும் உள்ள இவ்வுறவு முறையினை உணர்ந்தன்றோ,

     “பழையன கழிதலும் புதியன புகுதலும்
      வழுவல கால வகையி னானே”

என்ற விதி வகுப்பாராயினர் இலக்கண ஆசிரியர்கள்.

ஒரு மொழியில், பல்வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களை நோக்கின், பழையன கழிதலும், புதியன புகுதலும் ஆகிய இப்பண்பு இடம் பெற்றிருத் தலை உணரலாம். இவ்வாறு பழையன கழிந்து, புதியன புகுந்து தோன்றுவதையே, ஒரு சாரார் இலக்கிய வளர்ச்சி எனக் கொள்வர். பழையன எல்லாம் பழிக்கத் தக்கன; புதியன எல்லாம் போற்றற்குரியன என் எவரும்