பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 புலவர் கா. கோவிந்தன்



எண்ணுதல் கூடாது. அவ்வாறே, பழையன எல்லாம் பாராட்டற்குரியன; புதியன எல்லாம் பழித்தற்குரியன என்று எண்ணுதல் கூடாது. இரு திறத்தாரும் பிழையுடையாரே யாவர். பாராட்டற்குரியனவும், பழித்தற்குரியனவுமாய பண்புகள், பழையன புதியன ஆக இரண்டிலும் உள. ஆகவே, இலக்கியங்கள் தோன்றிய கால நிலை கண்டு, அவற்றைப் பாராட்டுவதும் பழிப்பதும் செய்யாது, அவ்விலக்கி யங்கள் போற்றும் பொருள் நிலைகண்டு, அப்பொருள் களை அவை உணர்த்தும் நெறிமுறை கண்டே, அவற்றிற்கு உயர்வு தாழ்வு கற்பித்தல் வேண்டும்.

இலக்கியங்கட்கும் அவ்விலக்கியங்கள் தோன்றிய காலங்கட்கும் உள்ள தொடர்பு இஃதாகவே, ஓர் இலக்கியத்தின் உண்மை இயல்பினை உள்ளவாறு உணர்ந்து மதிப்பிடல், அவ்விலக்கியம் தோன்றிய காலத்தின் சூழ்நிலையினை உணர்ந்தார்க்கல்லது இயலாது. ஆகவே, செங்கோலாட்சி புரிந்து இறவாப் புகழ் பெற்று விளங்கிய மூவேந்தர் ஆட்சிக் காலம் முதலாகத் தமிழ் நாட்டில் தோன்றி வழங்கும் இலக்கியங்களின் இயல்புகளை, அவை தோன்றிய காலங்களின் சூழ்நிலையோடு ஒருங்கு கண்டுணர்தலே சிறப்புடைத்தாம்.