பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 41



சாலையில் ஊர்ந்து செல்லும் வண்டியொன்று, கேடுற்று, அழிவது, அவ்வண்டியின் திண்மை இன்மையாலும் அன்று; செல்லும் வழிக் கேட்டாலும் அன்று; ஒரு வண்டியின் கேடு, கேடின்மைகளுக்கு, அவ்வண்டியின் திண்மையின்மையும், திண்மை யுண்மையும் காரணங்களாகா, செல்லும் வழியின் சீர்கேடும், சீரும் காரணங்களாகா, அவற்றிற்கு அவ்வண்டியை ஒட்டுவோனே காரணமாம். ஒட்டு கின்றவன் வண்டி ஒட்டும் தொழிலில் வல்லனாயின், அவ்வண்டியினை ஈர்த்துச் செல்லும் எருதுகளை அடக்கி ஆளத்தக்க ஆற்றலும், செல்லும் வழியின் இயல்பறிந்து ஒட்டும் அறிவும் வாய்க்கப் பெற்றோனாயின், திண்மையில்லா வண்டிகளையும், வழியிடையே கெடுத்துப் போக்காது ஒட்டிச் சென்று ஊர் அடைவான். அவன்பால் அவ்வாற்றலும், அறிவும் இன்றாயின், அவன் ஒட்டும் வண்டி, கல்போலும் திண்ணிதேயாயினும், பள்ளத்தில் வீழ்ந்து பாழாகியும், சேற்றில் சிக்குண்டு சிதைந்தும் கேடுறும். ஆற்றல் உடையான் ஒட்டும் வண்டி ஊறு இன்றி ஊர் அடைதல் மட்டுமன்று; அவ்வண்டியில் ஏறிச் செல்லும் மக்களும், அதை ஒட்டிச் செல்லும் அவனும், எண்ணிய இடம் அடைந்து இன்புறுவர்; அதற்கு மாறாக ஆற்றலிலான் ஒட்டும் வண்டி, இடை வழியில், உடைந்துபோதலோடு, அதில் ஏறிவந்த மக்களும், அதை ஒட்டி வந்த அவனும் எண்ணிய இடத்தை அடைய மாட்டாமையோடு, இடை வழியில் வீழ்ந்து இன்னலுக்கும் உள்ளாவர்.