பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 புலவர் கா. கோவிந்தன்



அழியாது இயங்குவது, உலகில் பண்புடைப் பெரியார்கள், நல்ல பல குணங்களான் நிறைந்த ஆன்றோர்கள், அவ்வப்போது தோன்றித் தோன்றி, மறம் அழித்து, அறம் வளர்த்து வந்தமையினாலேயே ஆகும்.

உலகியல் அழிவுறாவண்ணம், அரணாய் அமைந்து காக்கவல்ல அச்சான்றோர் யாவர்? அவர் பண்பு யாது? அவர்பால் காணலாம் அருங்குணங்கள் யாவை? இல்லிருந்து நல்லறமாற்றுதல், வருவிருந் தோம்பி வாழ்வதற்கேயாகும். விருந்தினர் வயிற்றுப் பசியால் வருந்தியிருக்க, வயிறார உண்பான் வாழ்க்கை வனப்புடையதாகாது. வளம் கெட்டு அழியும். ஆதலின், அவ்விருந்தினரை உண்பித்தன்றித் தாம் உண்டல் கூடாது. உண்ணும் உணவு கிடைத்தற்கு அரியதாய், ஒருவர்க்கே போதுமானதாயினும், அதையும், அவரோடு இருந்து பகிர்ந்துண்டலல்லது, தாமே தனித்துண்டல் தகாது. இந்தப் பண்பினைத் தலைமை சால் பண்பாகக் கொண்டு போற்றுவார் யாரோ அவரே பெருமையுடையவர்.

தினை விதைத்தால் தினை விளையும். ஆகவே, தினை வேண்டுவோர் தினையே விதைத்தல் வேண்டும். தன்பால் யாவரும் அன்பு காட்ட வேண்டும் என்று விரும்புவான், எல்லாரிடத்தும் தான் அன்பு காட்டுதல் வேண்டும். மாறாகப் பிறர்பால் வெறுப்புக் காட்டின், அவரும் அவனை வெறுப்பார். ஆகவே, எவரையும், எப்பொருளையும் வெறுக்காது விழைவு காட்டும் பண்பு, பெரியோர்க்கு மிக மிக வேண்டுவதாம்.