பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 புலவர் கா. கோவிந்தன்



பிறர் உழைக்கத் தான் பயன் துய்த்தல் அறநெறி யாகாது. உழுது உழைத்து ஊரார்க்கு உணவளித்து உழவெருதே போல், தான் உழைத்துப் பிறரைப் பேணலே பேராண்மையும் பேரறமும் ஆம்.

     “பல்லார் பயன்துய்க்கத் தான்வருந்தி வாழ்தலே
      நல்லாண் மகற்குக் கடன்.”

ஆகவே, மக்கள் ஒவ்வொருவரும், தமக்கென வாழாது, பிறர்க்கென வாழும் பேருள்ளம் உடையராதல் வேண்டும்.

ஈண்டுக் கூறிய ஒவ்வொன்றும் மிக உயர்ந்த உண்மையாம். அவற்றுள் ஒன்றையோ, ஒரு சிலவற்றையோ உடையோராகாது, அவை அனைத் தினையும் ஒருங்கே கொண்ட உரவோர், உலகோர் போற்றும் உயர்ந்தோராவர். அத்தகைய உயர்ந்தோர் வாழ்வதனாலேயே உலகியல் அழியாது உயிர்பெற்று இயங்குகிறது! இந்த அரிய அறவுரையினை, அழகிய செய்யுள் வடிவில் அமைத்து ஆக்கித் தந்துள்ளான், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. கடலுள் மாய்ந்தும், கருத்தில் மாயாத அவன் உரைத்த அறம் வாழ்க! வளர்க!