பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 புலவர் கா. கோவிந்தன்



தந்தைக்குக் கறவைக் கலம் கொண்டு செல்வாள்; புனத்துள மகனுக்கு உணவு கொண்டு செல்வாள்; தினை அரிதாள் மேயும் கன்றும் காப்பாள் என்று அவ்வாயர் மேற்கொள்ளும் தொழில்களை அழகு படக் கூறியுள்ளான்.

ஆயர் மகளிரின் கற்பு நெறியின் திறம் வியந்து, அவர் கற்பு நிற்க, அவ்வாயர் மேற்கொள்ளும் ஏறு தழுவற் பெரு விழாவினை விரிவாகக் கூறியுள்ளான். ஏறு தழுவல் ஆயர் குலத்திற்கே உரிய ஒரு விழா. ஆயர் ஆடு, மாடு, எருமைகளோடு வாழ்பவர். இவற்றுள் ஆணேறு மிகவும் ஆற்றலுடையது. ஆனேற்றை அடக்கி ஆள்தல் அரியதொரு செயலாகும். அதனால் உயிர் துறந்தாரும் உளர். ஆகவே மகளைப் பெற்ற ஆயன், எத்துணைக் கொடிய காளையையும் அடக்கியாளும் ஆற்றல் தன் மகளை மணப்போனுக்கு உண்டா என அறிந்தே மணம் செய்து தருவான். அம் மணமகனைத் தேர்ந்தெடுக்கும் விழாவே ஏறு தழுவல் விழாவாகும். நல்லுருத்திரன் பாடிய கலிப்பாக்கள் ஏறு தழுவலை நன்கு விளக்குகின்றன.

நல்லுருத்திரன், நாட்டு மக்கட்கு அளித்த நல்ல அறவுரை ஒன்று உளது. “ஊக்கம், உயர்வே உள்ளள் ஆகிய விழுமிய குணங்கட்கு நிலைக்களமாய் நின்றவன் நல்லுருத்திரன்; அவன் உயர்ந்தோர் போற்றும் உரன் மிகு உள்ளம் உடையான்!” என்ற உண்மையினை உணர்த்தி நிற்கும் உயர்வுடையது.