பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 73



அதைப் பொருளென மதியாது, அறநெறி வரும் பொருளையே போற்றும் பெருமைசால் உள்ளமுடைய ராவர். இவ்விருவகை மாந்தருள், எலியனையார், உள்ள உயர்வும், ஊக்கமும் அற்றவர்; ஈட்டிய பொருளை இழக்காமல் காக்கும் ஆற்றலும் அற்றவர். அத்தகையார் பெரும் பொருள் உடையார்போல் தோன்றினும், அவரோடு உறவு கொள்வதை உயர்ந்தோர் மேற்கொள்ளார்; பழியும், பாவமும் பண்ணிச் சேர்த்த பெரும் பொருளினும், பழி, பாவம் அறியா வறுமை வாழ்வே விழுமிய வாழ்வு ஆதலின், புலியன்னார், பெரும் பொருள் இலராயினும், அன்று அன்று வேண்டும் பொருளை அன்று அன்று தேடிப் பெறும் வறுமை வாழ்வினரே யாயினும், ஊக்கமும், உரனும், உயர்ந்த நோக்கமும் உடைய அன்னார் நட்பினையே, அறிவுடையார் நாடுவர். ஆகவே, உலகீர்! எலி யன்னார் இல்லம் புகாது, புலி யன்னார் தொடர்பினைப் போற்றிக் கொள்ளுமின்! உழைக்காது, பிறர் உழைப்பை அவர் அறியாது கவர்ந்து உண்ண எண்ணன்மின்! உள்ளத்தே ஊக்கம் கொள்ளுமின்! பெரும்பழி விடுத்து உறுபுகழ் தேடுமின்!” என அவன் உரைக்கும் அறவுரையினை நாமும் கடைப்பிடித்து, ஊக்கமும், உரனும், உயர்ந்த உள்ளமும் கொண்டு உய்வோமாக!