பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 புலவர் கா. கோவிந்தன்



“உதவுவதாலும் உறுபொருள் கொடுப்பதாலும் மட்டுமே, அம்மாற்றத்தினை உண்டாக்கி விடுதல் இயலாது. மேலும் ஒன்று தேவை. கல்வியுடையார் குலத்தால் கீழோராய், அவர்பால் கற்கவரும் மாணவன் மேற்குலத்தானாக, வந்த மாணவன், ‘யானோ மேற்குலத்து வந்தவன்; பணிந்து நின்று பழகியறியேன்! என்று எண்ணுவானாயினும், கல்வி தரும் ஆசிரியன் வறியனாக, கற்க வரும் மாணவன் மாநிதிச் செல்வ முடையனாக, வந்த மாணவன், யானோ செல்வச் சீமான்! ஆசிரியனோ, அன்றாட வாழ்க்கைக்கே அல்லலுறும் வறியன்! அவரைப் பணிந்து நிற்பது பழியாம்!’ என எண்ணுவானாயினும் அத்தகையாரால் வேண்டிய கல்வியை விரும்பியாங்குப் பெறுதல் இயலாது. தன்னைத் தாழ மதிக்கும் மனம் மாணவர் பால் உளது என்பதை ஆசிரியன் அறியின், அவன் உள்ளம் வாடும்; வாடிய அவன் உள்ளத்தினின்றும் விழுமிய கல்வி வாராது. ஆகவே கற்க விரும்புவார், பணிந்து, பின்னின்று கற்றற்குச் சிறிதும் பின்னடைதல் கூடாது.”

இவையனைத்தும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், அறிவு பெறும் கல்வியின் சிறப்பும், அதைப் பெறுதற்காம் அரிய வழியும் குறித்துக் கூறிய அறவுரைகளாம். அவன் கூறிய நெறியில் நின்று, ஆசிரியரைப் பணிந்து, கலை பல கற்று, நிலை பல பெற்று உயர்வோமாக!