இலக்கியச் சுவை
புதிய சூழ்நிலையும்
புதிய கடமையும்
[பாக்குக் கடிக்கிற நேரத்தில் திரைப்படக் காட்சிகள் கடுவேகத்தில் வந்து மறைவதுபோல் சிற்சில காட்சிகள் என் சிந்தனை ஓட்டத்தில் தோன்றி மறைந்தன. பாங்கல் மலருக்கு கட்டுரை தீட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என் சிந்தையில் மோதியதும் எழுந்த எதிரொலிகளே இவை]
நம்பி நெடுஞ்செழியன் ஓர் குறுநிலத் தலைவன். அவன் அறத்துறை, பொருள்துறை, இன்பத்துறை முதலிய எல்லாத் துறைகளிலும் மாசறக் கடைபோகி மாண்பு அடைந்தவன், சுருக்கத்தில் அவன் செய்யத் தகுவன எல்லாம் செய்து சிறப்பு அடைந்தவன்.
இந்த நெடுஞ்செழியன் எதிர்பாராத வகையில் உயிர் துறந்தான். வேல், வாள் முதலிய எத்தகைய படைக் கலங்களாலும் புண்பட்டு இறந்தானில்லை. பிறர் படைக்கலங்களால் தாக்குண்டு இறவாமல் எமனுக்கு இரையாகிறவர்கள் 'நோலாதவர்கள்' என்பது அக்காலக் கருத்து எனவே, அவ்வாறு இறந்தவர்கள் உடம்பை அடக்கம் செய்யுங்கால் படைக்கலத்தால் போழ்ந்து நிலத்தில் புதைக்கவோ அல்லது சுடவோ செய்வது அக் காலத்து பழக்கம்.