பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 38 –

யையும் தினையையும் கிளிகள் விரும்பி உண்ணும். கிளிகளின் உறைவிடம் பெரும்பாலும் மரப் பொந்துகளே. இவைகளில் உருவிற் சிறியனவும் பெரியனவும் உள இதனது வளைந்த அலகிற்குக் கைவிரல் நகமும் அவரை மலரும், இதனது மூக்கிற்கு அழகிய பெண்களின் கூரிய உகிரும் மாங்காயும் ஒப்பிடப்படுகின்றன. மடக்கிளியின் சிறகுகள் மங்கையர் மனத்தைக் கவரும் வகையில் அழகுற விளங்குகின்றன.

பிற்காலப் புலவர்கள் கிளியினைத் தூது விடுவதாகச் செய்யுளியற்றல் மரபாகும். மேலும் மற நெறியில் நின்று மனமாற்றம் அடைந்து அருள் நெறியில் திளைத்துக் குமரன் அருள்பெற்ற அருணகிரிநாதர் கிளி வடிவெடுத்து அக்குமரனின் தோள் மீதமர்ந்து உலகில் நடப்பவைகளே உடனுக்குடன் முருகனது செவியில் சொல்லுகின்றார் என்ற ஐதீகமும் தமிழ் நாட்டில் நிலவுகின்றது.

அஞ்சுகம் அன்றும் இன்றும் நம்முடன் ஒன்றிவாழும் பறவையாகும். மங்கையர் இதனுடன் தோழமை பூண்டு பேசியும் மகிழ்வர். ' சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பது பண்டு தொட்டு வழங்கிவரும் பழமொழியாகும். எனவே சில மகளிர் எப்பொழுதும் கிளியினைத் தம் அருகே வைத்துப் பேசி மகிழ்வர்; பாலும் பழமும் சோறும் ஊட்டி வளர்ப்பர். இரவில் தலைவனும் தலைவியும் கூடுங்கால், அவர்கள் காதல் மிகுந்து மனங்கனிந்து முரை பிறழ்ந்து பேசியதை, பகலில் கிளி சொல்லத் தொடங்க, அதனைக் கேட்ட தலைவி நாணி, அக்கிளியினை மேலே பேசவிடாது அதன் வாயைப் புதைத்தனள் என்று கலிங்கத்துப் பரணியில் காணப்பெறும் செய்தி படித்து இன்புறுதற்குரியதாகும். அப்பாடல் வருமாறு