பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- 55 -

கண்ட மனையுறை குருவி வெகுண்டெழுந்தது. தன் சிறிய குஞ்சுகளொடு அப்பெடை, குடம்பையினுள் ஆண் குருவியைத் தடுத்துவிட, சேவல் குருவி மழையில் நனைந்து, வெளியிலே இருந்தது. இவ்வாறு ஆண் குருவி நெடும்பொழுது மழையில் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்தது. இறுதியில் பெடை கோபம் தணிய அருள்கூர்ந்து இரக்கமுற்று ஆண் குருவியினைத் தன்பால் வருமாறு அழைத்தது. ஆனால் நாணமும் மனச்சாட்சியின் உறுத்தலும் ஆண் குருவியினைப் பெரிதும் தாக்கியதால் அது கூட்டினுள்ளே செல்லாது செயலற்று, வெளியே நின்றது. இதனை,

"உள்ளிறைக் குரீஇக் காரணல் சேவல்
பிறபுலத் துணையோடு உறைபுலத் தல்கி
வந்ததன் செவ்வி நோக்கிப் பேடை
நெறிகிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறுபுல் பிள்ளையொடு குடம்பை கடிதலில்
துவலையின் நனைந்த புறத்த தயலது
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து
ஈர நெஞ்சில் தன்வயின் விளிப்பக்
கையற வந்த மையல் மாலை”

என்று நற்றினை கூறுகின்றது.

அன்னநடையும் இளமாதர் மென்னடையும்

குறுகிய சிவந்த காலும், ஒன்றற்கொன்று விலகிய மெல்லிய வெண்மையான சிறகும், கால் விரல்களின் இடையே தோல் இணைந்த தன்மையும், மெல்லிய இயற்கைப் பான்மையும் உடைய அன்னம் குமரிக்கடலில் அயிரை மீனை அருந்தி வடமலைக்குச் சென்று அதன் உச்சியில் உறையும். வான்புகழ் வள்ளுவர் உள்ளத்தினையே