பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17



கலைக் களஞ்சியச் சான்று

"இத்தலத்தின் பெருமானை ஸ்ரீ நிவாசன், வேங்கடாசலபதி எனத் தென்னாட்டவரும் பாலாஜி என்று வட நாட்டவரும் பொதுவாகக் குறிப்பர். இத்தலத்தில் தாயாருக்குத் தனிக் கோயில் இல்லை............. இங்குள்ள திருமாலைப் பற்றிக் கூறுவோர் இவரது ஒரு பாதி விஷ்ணுவாகவும் மற்றைப் பாதி சிவனாகவும் இருப்பதாகவும், விஷ்ணு பாகத்தில் இலக்குமியை மார்பின் மீது வைத்திருப்பதாகவும், ஒவ்வோர் இரவிலும் பிரமதேவன் இவரைப் பூசிப்பதாகவும் சொல்லுகிறார்கள். இப்படியாக இவர் எல்லா மதத்தினராலும் துதிக்கப்படும் தெய்வமாகத் திகழ்கின்றார். ............... இக்கோயிலின் கருப்பக் கிருக்கத்தின் மதில்கள் மேல் சிம்மப் பதுமைகள் வைக்கப்பட்டிருப்பது சக்தியின் பெருமையைக் குறிக்கும். சாதாரணமாக எல்லாத் திருமால் கோயில்களிலும் கருடப் பதுமைகள் வைக்கப்பட்டிருக்கும்." -

பாலாஜி

இது கலைக் களஞ்சியப் பகுதியாகும். தாயாருக்குத் தனிக் கோயில் இல்லையாம்-ஏன் இல்லை? பெரும்பாலான முருகன் கோயில்களில் வள்ளிக்கும் தெய்வயானைக்கும் தனிக்கோயில் இல்லை என்பது ஈண்டு எண்ணத் தக்கது! முருகன் கோயிலில் சிவன் திருமேனி இருப்பினும் அம்மன் திருமேனியும் இருக்கும். இதுபோல் திருமலையில் தாயார் திருக்கோயில் இல்லாத குறையை மறைக்க, கீழே உள்ள அலர் மேல் மங்கைக் கோயிலைத் திருமலைக் கோயிலோடு கதை கட்டி முடிச்சு போடுகின்றனர்.

இல-2