பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25



தமிழ் முருகன் மலை

அடுத்து 18 ஆம் நூற்றாண்டின ராகிய சிவஞான முனிவரின் கருத்தைக் காண்போம். பனம் பாரனார் இயற்றிய "வடவேக்கடம் தென்குமரி" என்னும் சிறப்புப் பாயிரப் பாடலுக்கு இவர் விரிவுரை எழுதியுள்ளார். இதனைப் 'பாயிர விருத்தி' என்பர். இவ்வுரையில் வட வேங்கடம் தென்குமரி பற்றி அவர் எழுதியுள்ள பகுதி வருமாறு:-

"வேங்கடம் குமரி எனவே திசை பெறப்படுமாயினும் எல்லை கூறப் புகுந்தா ராதலின், அதற்கேற்பத் திசை கூறி எல்லை கூறுதல் மரபென்பது பற்றி, "வடவேங்கடம் தென்குமரி என்றார்.

தமிழ் நாட்டுக்கு வடக்கண் பிற எல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லையாகக்கூறினார் அகத்தியனாருக்கு. தமிழைச் செவியறிவுறுத்திய செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பு (மலை) என்னும் இயைபு பற்றி என்பது. தெற்கண் குமரியாதலின் அதுவே எல்லையாயிற்று. கிழக்கு மேற்குக்கடல் எல்லையாகலின் வேறு எல்லை கூறாராயினார்" -என்பது உரைப்பகுதி.

வேங்கடம் முருகனுக்கு உரியது என்பது சிவஞான முனிவரின் கருத்து. இதில் உண்மை யில்லையெனில் இவருக்கும் பைத்தியமா என்ன இவ்வாறு கூற? அடுத்து, 15ஆம் நூற்றாண்டினராகிய அருணகிரி நாதர் தம் திருப் புகழ்ப் பாடல்களில் இது பற்றிக் கூறியுள்ள பகுதிகள் வருமாறு:-

திருப்புகழ்ச் சான்று

1. 'கறுத்த தலை’ என்று தொடங்கும் திருப்புகழில்

"மலர்க் கமல வடிவுள செங்கை
அயிற் குமர குகைவழி வந்த
மலைக் சிகர வடமலை நின்ற பெருமாளே"-