பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45


செய்யுள் நடையில் உள்ள புராணப் பகுதிகளை மேலுள்ளவாறு உரைநடைப் படுத்தி இந்த நூலை உருவாக்கியவர் ஆர். சந்திரமோகன், பி. ஏ எனவும், விலை ரூ. 6-50 எனவும், லோட்டஸ் பப்ளிஷிங் ஹெளஸ் சென்னை-24-ஆறாம் பதிப்பு மார்ச் 1978 எனவும் இந் நூலின் முகப்பில் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குமேல் இன்னும் என்ன சொல்ல வேண்டும்? நடுவு நிலைமை கொண்ட உள்ளங்களே வேண்டும்.

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தை யான் மறந்து விடவில்லை. சில நாட்களில் மாலையில் கிழக்கே திங்கள் தோன்றுவதும் மேற்கே ஞாயிறு மறைவதும் ஒரே நேரத்தில் நிகழ்வதுண்டு. இந்த அடிப்படையில், இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் திருவேங்கட மலை தொடர்பாக ஒரு கற்பனை செய்துள்ளார். அஃதாவது:- முகிலானது ஒரு பக்கம் திங்களும் மற்றொரு பக்கம் ஞாயிறும் இருக்கத் தோன்றுவது போல, வேங்கட மலையில் திருமால் இரு கைகளிலும் சங்கு சக்கரத்துடன் இருக்கிறார் என்று கூறி யுள்ளார். பாடல் பகுதி வருமாறு :

"வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடை நிலைத் தானத்து
மின்னுக் கொடி உயர்த்து விளங்குவில் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி

(காடு காண் காதை : 41—48)