பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சான்றோர் அவ்வம் மலரை ஆண்டுள்ள மிகுதிப்பாட்டுடன் தகுதிப்பாட்டையும், இனத் தொடர்புடன் இணைத் தொடர்பையும் ஆழ்ந்த கவனத்திற் கொண்டும் தேர்ந்த ஆய்வைக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

       அனிச்சம் முதலிய 9 'அரியமலர்கள் காட்டப் பட்டுள்ளன அனிச்சம் துல்லியமற்ற தோராயமான கருத் தையே தரும். நெருஞ்சி முதலிய 9 'எளிய மலர்'களை எளிமையிலும் சிறந்து நிற்பனவாகக் காணலாம்.
       ஒவ்வொரு மலர்க்கும் தனித்தனி இலக்கியப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. கவர்ச்சி கூட்டும் இப் பெயர்கள் என் கைச்சரக்கல்ல. அவ்வம் மலர் பற்றிய பாடலில் தமிழ்ப் பெருஞ்சான்றோர் அமைத்து விளக்கியவண்ணித்த உவமித்த சொற்களைக் கொண்ட சொற் கோவையாகும். இப்பெயர்ப் பொருத்தமும் ஆங்காங்கே புலப்படுத்தப்பட்டுள்ளது.
       பாடல்களைக் காட்டும்போது அதனைப் படைத்த புலவர் பெயரைக் குறிப்பதே முறையும் நன்றிப் பண்புமாகும். பல புலவர்களது பாடல்களைக் கொண்ட தொகை நூல்கள் தமிழில் உள. நூற்பெயரை மட்டும் குறிப்பது படைத்தோர் கருத்தைக் குறிக்கும் தெளிவாகாது. ஆங்கிலக் கட்டுரைகளில் இம்முறை பெருமை யாகக் கருதப்படுவதைக் கருதிப்பார்க்கலாம். மீண்டும் மீண்டும் வரினும் புலவர் பெயரைக் குறிப்பதைக் கைவிட வில்லை.
       நூலாய்வு, வல்லார்வாய்க் கேள்வி, கல்வெட்டுக் கருத்து, செவிவழிச்செய்திகள், நாட்டுப் பாடல், பழமொழிகள், சொல்லாய்வுச் சான்றுகள் கொள்ளப்பட்டாலும் ஐயந்திரிபறக் காண நேர் பார்வைக்குக் கீழைக் கடற்கரை முதல் மேலை மலைமுகடு வரை சில பயணங்களை மேற் கொண்டமை தெளிவும் நல்கிற்று. எடுக்கப்பட்ட புகைப் படங்கள் அழிந்தமை ஓர் அவலமாயிற்று. மலர்ப்படங்கள் இல்லாமை இந்நூற்கொரு குறையே.
       சங்கப்பாடல் முதலாகப் பாவேந்தர் பாடல் வரை தமிழ்நூல்களும் சில ஆங்கில நூல்களும் நெறித்துணை