இலக்கியம் ஒரு பூக்காடு:pdf/22 தொகுக்கப்படுகிறது
என்னும் இந்நூல்,தமிழ்நிலப் பூக்கள் அனைத்தையும் தொகுத்து,அவை இலக்கியங்களில் பெற்றுள்ள இடங்களைச் சுட்டிக்காட்டி, அவற்றின் வகை-நிறம்-வளரும் நிலம்-மலரும் பருவம்-செடியியல் இனப்பெயர்-பயன் ஆகிய அனைத்தையும் மிகச்சரியாகவும் விரிவாகவும் தந்துள்ளமை தமிழ் நூல் வரலாற்றில் தனித்துக் குறிப்பிடத்தகுந்தப் பெரு முயற்சியாகும்.
பரஞ்சோதியார், "சோலையுள் நுழைந்து, வாவியுள் புகுந்து, தாமரையைத் துழாவி, மல்லிகை முல்லை மலர்களில் படிந்து, குளிர்ச்சியையும் மணத்தையும் தேக்கி" தென்றல் வீசுவதாகக் குறிப்பிடுவார். அதுபோலத் திரு.இளஞ்சேரன் அவர்கள் 150 தமிழிலக்கிய நூல்களுள் நுழைந்து, 10 அரிய ஆங்கிலக்கருவி நூல்களுள் புகுந்து,துழாவி எடுத்தக் கருத்துகளோடு தம் புலமையையும் பட்டறிவையும் இணைத்து ஆராய்ச்சித் தென்றலாக' இந்நூலை உலவ விட்டுள்ளார். இவ்வகையில்,இந்நூல் ஒரு மலர்க் களஞ்சியம்.
"பூ வரலாறு" ______________
உலகெங்கும் பூக்கள் நிறைந்துள்ளன. என்றாலும் நாட்டுக்கு நாடு அவற்றை நோக்கிய முறையில் உள்ள வெவ்வேறு வேறுபாட்டை ஆசிரியர், "கீழை நாட்டு மக்கள் பூக்களைப் பயன் படுத்திய வகையில் உணர்ச்சிப் போக்கு நிறைவானது;அறிவுப் போக்கு குறைவானது. மேலை நாட்டார் போக்கில் அறிவுப் பாங்கு உலகளவு;உணர்ச்சிப் பாங்கு உழக்களவு எனலாம்" என நன்கு சுட்டுகிறார். பூவைப் பற்றிய அறிவியல் ஆய்வால் தோட்டக்கலை, பூங்காக்கலை,இல்ல ஒப்பனைக்கலை, மலரடுக்குக்கலை போன்றவை மலர்ந்ததை ஆசிரியர் நன்கு விளக்குகிறார்,
"அனைத்தும் பூவில் உண்டு" _________________
மலர் வணிகம், மலர்ச்செடி-கொடி வணிகம்,மலரிலிருந்து உண்டாக்கப்படும் மணப்பூச்சுப் பொருள் வணிகம் என்பவற்றால் பொருளியலுடன் பூ தொடர்பு கொண்டுள்ளது. கொன்றையாண்டி, மலரவன் எனக் கடவுளரைப் பூப்பெயரிட்டு அழைப்பதாலும் வழிபாட்டிற்குப் பூ முதன்மைப் பொருளாக இருப்பதாலும் அஃது ஆன்மவியலிலும் இடம்பெறுகிறது. மலரில்லாத இலக்கியமே இல்லையாதலின் இலக்கியவியலில் மலர் ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறாக, உலகவியல் அனைத்தும் பூவில் அடங்குகிறது என்பதை ஆசிரியர் நன்கு சுட்டிக் காட்டுகிறார்.திருத்தம் பார்க்கப்பட்டது