பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3

பண்பாடு உடையராதல் கூடும், உண்மையைக் கூற வேண்டுமாயின், செல்வம் உற்றாரினும், அஃது அற்றாரிடத்திலேயே பண்பாடு பொருந்தியிருக்கும். வள்ளுவரும் பிறரும், பண்பாடே, நாகரிகம் என்ற சொல்லால், குறிப்பிடப்படுதல் வேண்டும் ; நாகரிகம் என்ற அச்சொல் செல்வ வாழ்வைக் குறித்தல் கூடாது என்று கூறி நாகரிகம் என்ற சொல்லிற்குப் புதுப்பொருள் காண்டல் பின்வரும் அவர் உரைகளான் உணர்த்தப்பெறும்.

"பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
 நாகரிகம் வேண்டுபவர்."

-குறள்-580.

"முந்தை இருந்து கட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்."

-நற்றிணை-355.

"நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வமன்று தன்செய்வினைப் பயனே;
சான்றோர் செல்வமென்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வமென்பதுவே."

-நற்றிணை-210.

ஒரு மொழி வழங்கும் மக்களின் பண்பாட்டினை, அம்மொழியில் உள்ள இலக்கியங்களின் எண்ணிக்கையினைக் கொண்டு மதிப்பிடல் கூடாது. அவ்விலக்கியங்களின் இயல்பை உணர்ந்தே மதிப்பிடல் வேண்டும். இலக்கியச் செல்வம் எண்ணால் பெரிதாதல், ஒரு மொழியாளர்க்குப் பெருமை ஆகாது. அஃது இயல்பால் பெரிதாதலே, அவர்க்குப் பெருமையாம். இலக்கிய நூல்கள் இழிந்த பண்பாட்டினவாயின், அவை எண்ணற்றுக் கிடைப்ப