பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

அவ்வாறு ஒருவரையொருவர் அடுத்து வாழ வேண்டிய நிலையுற்ற மக்களுக்கு, ஒருவர் கருத்தையொருவர் அறிந்து கொள்ள வேண்டியதும் இன்றியமையாததாயிற்று. அவ்வாறே, தம்உள்ளக் கருத்தைப் பிறர்க்கு உரைத்தும், பிறர் உள்ளக் கருத்தைத் தாம் அறிந்தும் வாழத் தொடங்கினர். ஒருவர் கருத்தை ஒருவர் உணரவும், ஒருவர் கருத்தை ஒருவருக்கு உணர்த்தவும் மக்கள் மேற்கொண்ட கருவியே மொழி. மொழி தோன்றிய சூழ்நிலை இதுவே. மொழியின் அடிப்படைத் தத்துவம், அன்றும் இன்றும் என்றும் ஒன்றே. ஆனால், ஒரு மொழி இன்றுள்ள நிலையில், அது தோன்றின காலத்தில் இருந்ததில்லை. இன்று, பல்வகையிலும் வளர்ந்து, பல்லாற்றானும் நிறைவுடையதாய்க் காணும் மொழி, அன்று, அது தோன்றிய காலத்தில், பெரிதும் குறைபாடுடைய தாகவே இருந்தது.

உள்ளக் கருத்தினை உணர்த்தவும்,உறுதுணை புரிவதே மொழியின் இயல்பாம் எனினும், அவ்வாறு உணர்த்த உறுதுணை புரிவன எல்லாம் மொழிகளாகா. உந்துவண்டி ஒன்று, ஒர் ஊர் நோக்கிச் சென்று கொண்டுளது. வண்டி யோட்டி முன்னே உள்ளார். வண்டியை ஒட்டுவிக்கும் ஊர்தித் துணைவர் பின்னே உள்ளார்: ஊர்தித் துணைவர் ஓட்டென ஓட்டி. நிறுத்தென நிறுத்த வேண்டியது வண்டி ஒட்டியின் கடமை. மக்கள் ஏறும் இடங்களிலும், இறங்கும் இடங்களிலும் வண்டியை நிறுத்தப் பண்ணி, மக்களை ஏற்றியும் இறக்கியும் செல்வது ஊர்தித்துணைவர் கடமை. வண்டி ஓடிக் கொண்டே உளது. எதிரே ஊர் ஒன்று வருவதைக்