பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சைவர்களும், வைஷ்ணவர்களும் தம் சமய வளர்ச்சிக்கு இலக்கியத்துணை நாடுவது கண்ட பௌத்தரும் சமணரும், தாமும் அவ்ழியினையே மேற்கோடல் வேண்டும் எனக் கருதினர். இலக்கியத் துணைபெற வேண்டும் என விரும்பிய அவர்கள், தாம் இயற்ற விரும்பும் இலக்கியங்கள், அவ்விலக்கியங்களைப் போல வழிபாட்டுப் பாடல்களாக அமைவதை விரும்பவில்லை. இயற்றும் இலக்கியத்துள் ஒரு புதுமை காண விரும்பினர். வழிபாட்டுப் பாடல்கள், சமயக் கொள்கைகளில் ஊறிய உள்ளம் உடையார்க்கு மட்டுமே உணர்வூட்டும். சமயச் சார்பு அற்றாரை ஈர்க்கும் ஆற்றல் அவற்றிக்கு இல்லை. ஆகவே தம் சமயத்தை வளர்க்க விரும்புவார்க்கு, வழிபாட்டு இலக்கியங்கள் துணைபுரியா: சமயச் சார்பு அற்றாரையும், புறச் சமயச் சார்பு உற்றாரையும் தம்பால் ஈர்க்கவல்ல இலக்கியங்கள் அவர்க்கு வேண்டும் என்ற உண்மை இயல்புகளை உணர்ந்தனர். இவ்வெண்ணத்தால் உந்தப் பெற்ற அவர்கள், அக்கால மக்களால் விரும்பிக் கேட்கப் பெற்ற சில வரலாறுகளைத் தம் இலக்கியப் பொருள்களாக மேற்கொண்டு, அவ்வரலாறு உரைப்பதற்கிடையிடையே, அவ்வரலாற்றோடு யாதோ ஒரு வகையான் தொடர்புறுமாறு, தம் சமயக் கொள்கைகளை உணர்த்திச் செல்வராயினர்.

மேலும் அதுகாறும் எழுந்த இலக்கியங்கள் எல்லாம், பெரும்பாலும் ஆசிரியப்பாவால் ஆக்கப்பெற்று, இசை இன்பம் அற்றிருப்பது கண்டு, தாம் இயற்றும் இலக்கியங்கள், அக்குறைபாடும் நீங்க, அம்மானை, ஊசல், குரவை, வரி, வள்ளை முதலாம் இசைப் பாடல்கள் இடை இடையே