பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. புராண இலக்கியங்கள்

பதினான்காம் நூற்றாண்டிற்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம், தமிழிலக்கியம் பல்லாற்றானும் தாழ்வுற்ற காலமாம். களப்பிரரை அழித்துத் தனியரசு அமைத்து ஆண்ட கடுங்கோன் வழிவந்த பாண்டிய மன்னர்களும், பல்லவர், பாண்டியர் ஆய இரு பேரரசுகளையும் ஒருங்கே அழித்து, அரசமைத்து ஆளத் தொடங்கிய விசயாலயன் வழிவந்த சோழ அரசர்களும், புலவரைப் பேணியும், சங்கம் அமைத்தும் செந்தமிழ் வளர்த்த தம் முன்னோரைப் போலாது, வடமொழியிடத்தும், வடவர் நாகரிகத்திடத்தும் பற்றும் பாசமும் கொண்டனர். வெற்றிவேற் செழியன், முடத்திருமாறன், முதுகுடுமிப் பெருவழுதி என்ற தனித் தமிழ்ப் பெயர்களை விடுத்து மாறவர்மன் அவனி சூளாமணி, சடாவர்மன் குலசேகரன் என்பன போலும் வடமொழிப் பெயர்களைப் பாண்டியர் மேற்கொண்டனர். நலங்கிள்ளி, திருமாவளவன், இளஞ்சேட் சென்னி என்ற இனிய தமிழ்ப் பெயர்களை விடுவித்து, இராஜேந்திரன், குலோத்துங்கன் என்பன போலும் வடமொழிப் பெயர்களைச் சோழர்கள் மேற்கொண்டனர். தம் இயற்பெயரும் தமிழில் இருத்தல் கூடாது; வடமொழியிலேயே வழங்குதல் வேண்டும் என்று விரும்பும் அளவு, வடநாட்டு நாகரிகம், தமிழ்நாட்டில்