பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

இலங்கைக் காட்சிகள்

மேலே மலையிலிருந்து அருவி கீழே விழும் முகட்டில் ஒரே வெண் புகை; இல்லை இல்லை, நீராவி, அது கூடத் தப்பு; மிகமிக மெல்லிதாகப் பஞ்சைப் பன்னிப் பறக்க விட்டால் எப்படி இருக்கும்? பாலிலிருந்து பணியாக்கி அதை எங்கும் தூவினால் எப்படி இருக்கும்? பனிக்கட்டியைப் பொடியாக்கி அதில் வெண்மை நிறத்தை இன்னும் ஊட்டி லேசாகத் தூவினால் எப்படித் தோன்றும்?- இவைகளெல்லாம் உபமானம் ஆகுமா? மலைமுகட்டில், அருவி வீழும் இடத்தில் இருந்த காட்சிக்கு எதை உவமை சொல்வது? அதற்கு அதுவே உவமை. "கண்டவர் விண்டிலர்" என்பது அந்த அருவியின் திறத்திலும் பொருந்தும். அருவி வீழும் வேகத்தில் நீரின் பிசிர் புகை போல எழுகிறது. நீர் கீழே விழுகிறது. அதன் பிசிர் புகை பருந்து போல மேலே எழுகிறது. அது நீர்த்துளியும் அல்ல; நீராவியும் அல்ல; நீரின் அணுக்கள் சேர்ந்த படலம், அழகாக விரித்த பனிப்படலம் போல, உதறிவிட்ட வெள்ளைப் போர்வை போல, அது அந்த முகட்டிலே மிதந்தது.

அருவியின் நீர்த்தாரை தண்ணீர் அல்ல; பால் தான். வெள்ளை வெளேரென்று விழும்போது அதன் காட்சியும் ஓசையும் காணக் காண இனிக்கும் பேரழகு. அதை இன்று நினைத்தாலும் உள்ளத்தில் இன்ப அருவி துள்ளுகிறது.

"நீங்கள் நீலகிரிக்குப் போனது உண்டா ?" என்று கணேஷ் கேட்டார்.

"இல்லையே!" என்றேன்.