பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதிர்காமம்

141

வேறு சிலர், மிகவும் சக்தியுள்ள யந்திரத்தகடு அந்தப் பெட்டிக்குள் இருக்கிறதென்றும், அதனால்தான் இத்தனை மக்கள் இங்கே வந்து வழிபடுகிறார்களென்றும் கருதுகின்றனர். கூட்டம் மிகுதியாக வரும் ஆலயங்களில் யந்திரங்கள் இருப்பது இந்த நாட்டில் பெருவழக்கு. இதற்கு ஆதாரமாக ஒரு கர்ணபரம்பரைச் செய்தி அங்கே வழங்குகிறது:

காஷ்மீரத்திலிருந்து ஓரன்பர் கதிர் காமத்துக்கு வந்து தவம் புரிந்தார். அவரை முத்துலிங்க சுவாமி என்று வழங்கினர். அவர் இத்தலத்தில் முருகன் பேரருள் உடையவகை இருத்தலை அறிந்து தம்முடைய ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்று நினைத்தார். அவர் மந்திர சக்தி உடையவர். முருகனுடைய சக்தியை ஆகர்ஷணம் செய்து ஒரு யந்திரத்தில் அடைத்து எடுத்துச் செல்லச் சித்தமாக இருந்தார். புறப்படுவதற்கு முதல் நாள் இரவு, இங்கிருந்த சிங்களத் தலைவருடைய கனவில் வள்ளியம்மை எழுந்தருளி, "என் கணவனை முத்துலிங்க சுவாமி எடுத்துப் போகப் போகிறான். அதைத் தடுத்து எனக்கு மாங்கலியப் பிச்சை தரவேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள். அவள் சிங்கள வேடர் குலத்திலே உதித்த பெண் ஆதலின் அப்படி வந்து முறையிட்டாள். உடனே சிங்களத் தலைவர் விழித்துக் கொண்டு முத்துலிங்க சுவாமியைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டார். அவர் ஆகர்ஷணம் செய்து வைத்த யந்திரத்தைப் பெட்டிக்குள் இருந்தபடியே கோயிலிலே வைத்து வழிபடலானார்கள்.

இப்படி ஒரு கதை வழங்குகிறது. இதைக் கொண்டுதான் பெட்டிக்குள் யந்திரம் இருக்கிற-