பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

இலங்கைக் காட்சிகள்

இந்தக் கோயிலுக்கு அஸ்திவாரம் போட்டு எழுப்பியிருக்கிறோம். ஆகையினால் இன்னும் பலகாலம் சிறப்பாக விளங்கும்” என்று அவர் சொன்னார். என்ன நம்பிக்கை, பாருங்கள்!

அந்தக் கோயிலிலுள்ள நிலத்தை ரம்புக் வெல்ல என்ற சிங்களச் செல்வர் நன்கொடையாக வழங்கியிருக்கிறார். வேறு சிலர் சிறுசிறு தொகைகளை அளித்திருக்கிறார்கள். அவற்றை நன்றியறிவுடன் ஏற்றுக் கணக்கு வைத்துக்கொண்டிருக்கிறார் கன்னையாராஜா. "இதற்கு என்ன பெயர்?" என்று அவரைக் கேட்டேன்.

"திருவருள் கிரிபுரி குன்றம்” என்று அவர் சொன்னார். திருப்புகழ்ப் பாட்டின் பகுதியைச் சொல்வதுபோலச் சொன்னார். அவராக வைத்த பெயர் அது. அந்தப் பெயரிலேயே அவருக்கு உள்ள அன்பும் ஆசையும் தெரிகின்றன. அத்தனை நீளமாக வாய் நிரம்பச் சொல்ல வேண்டுமென்று அவருக்கு ஆசை. அங்கே ஒரு மடம் அமைத்திருக்கிறார் அஷ்டலகஷ்மி விலாச மண்டபம் கட்டியிருக்கிறார். மடத்துக்கு, "தசநாத பூரண மடாலயம்" என்று பெயர் வைத்திருக்கிறார். அங்கே யாழ்ப்பாணத்துப் பரதேசி ஒருவர் இருக்கிறார். மடத்திற்கு எதிரே கமுகும் வாழையும் வெற்றிலைக் கொடியும் மிளகுக் கொடியும் வளர்ந்திருக்கின்றன. கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளையே அங்கே காண முடியும்.

கோயிலுக்குள்ளே புகுந்து விக்கிரகங்களை யெல்லாம் பார்த்தோம். இன்னும் சில விக்கிரகங்கள் வருமென்று சொன்னர். மடம், மண்டபம், மடைப்-